சென்னை போர் நினைவுச் சின்னம், நாட்டின் வீரம் மற்றும் தியாகத்தை பறைசாற்றும் விதமாக ராணுவ பாரம்பரிய வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.
சென்னை மெரினா கடற்கரைக்கும் புனித ஜார்ஜ் கோட்டைக்கும் இடையே அமைந்துள்ள போர் நினைவுச் சின்னம் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களில் வீரமரணமடைந்த சென்னை மாகாண வீரர்களின் நினைவாக அமைக்கப்பட்டது.
சுதந்திரத்துக்கு பின் ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்று வீரமரணமடைந்த முப்படை வீரர்களை கவுரவிக்கும் தேசிய நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டது.
இந்த போர் நினைவுச் சின்னம் தற்போது, இந்திய முப்படைகளின் வரலாற்று வெற்றிகளையும், தியாகங்களையும் போற்றும் நாட்டின் முன்னணி ராணுவ பாரம்பரிய மையமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் தக்ஷின் பாரத் பகுதி தலைமையகம், தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சியின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் போர் நினைவு சின்னத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக, இந்திய ராணுவத்தில் நீண்டகால சேவைக்கு பின் ஓய்வுபெற்ற ‘டி-55’ ரக போர் பீரங்கி பிரத்யேக மேடையில் நிறுவப்பட்டுள்ளது.
இத்துடன், நாட்டின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி போர்க் கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், ஐஎன்எஸ் அஞ்சதீப் ஆகியவற்றின் மாதிரிகளும் மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்திய வான்படையின் பெருமையை பறைசாற்றும் மிக முக்கிய போர் விமானமான ‘மிக்-21’ மற்றும் இந்திய கடலோர காவல்படையின் ரோந்து ஊர்திகளின் மாதிரிகளும் விரைவில் நிறுவப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே தேசபக்தியையும், ராணுவத்தை பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் சிறப்பு ‘ஒளி மற்றும் ஒலிக் காட்சி நிகழ்ச்சியும் தொடங்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















