தேர்வு முறைகளில் சீர்திருத்தம் கொண்டுவர, தொழில்நுட்ப நிபுணரும் இன்ஃபோசிஸ் இணை நிறுவனருமான நந்தன் நீலகேனி தலைமையில் குழு அமைக்கப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், மாணவர்களின் எதிர்காலம் கருதி மத்திய அரசு பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்வதாக கூறியுள்ளார்.
மாணவர்களின் எதிர்காலத்தை சிதைத்தவர்கள் சிறையில் இருப்பதாகவும், இந்த விவகாரத்தில் விரைவு நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்களுக்கு கடும் தண்டனை அளிப்பதற்காக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என்று கூறிய பிரதமர்,
தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டு தேர்வு முறையை சீர்திருத்தும் நோக்கில், பிரபல தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நீலகேனி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அந்தக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், இனி நடைபெறும் அனைத்து தேர்வுகளிலும் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படும் என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
















