தமிழகம் உட்பட 4 தென்மாநிலங்களில் 10 ஆயிரத்து 21 கோடி ரூபாய் மதிப்பிலான 5 ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.
நாட்டின் முக்கிய ரயில்வே வழித்தடங்களில் நெரிசலைக் குறைத்து, பாதை திறனை அதிகரித்து, ரயில்களின் இயக்க திறனை மேம்படுத்தும் வகையில், சுமார் 20 ஆயிரத்து 804 கோடி ரூபாய் மதிப்பிலான 8 ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தத் திட்டங்கள் கடந்த 12 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் ரயில்வே நவீனமயமாக்கல் பணிகளின் ஒரு பகுதி என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய 4 மாநிலங்களை உள்ளடக்கிய சுமார் 10 ஆயிரத்து 21 கோடி ரூபாய் மதிப்பிலான 5 ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
அரக்கோணம் – ரேணிகுண்டா இடையே 77 கிலோமீட்டர் தொலைவுக்கு 3வது மற்றும் 4வது ரயில் பாதைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓசூர் – ஓமலூர் இடையே 147 கிலோமீட்டர் தொலைவுக்கு இரட்டை ரயில் பாதைக்கும், சேலம்-கரூர்-திண்டுக்கல் இடையே 159 கிலோமீட்டர் தொலை இரட்டை ரயில் பாதை உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
















