நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், வினாத்தாள் முறைகேடு சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல், நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் நாடாளுமன்ற இரு அவைகளும் முடங்கின. இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்கப்படுவதை உறுதி செய்ய முடிவு செய்யப்பட்டது.
பொதுத்தேர்வு முறைகேடுகளை தடுக்கும் வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், வினாத்தாள் கசிவைத் தடுக்கும் வகையில் பொதுத்தேர்வுகள் சட்டம்-2024 திருத்த மசோதா, மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
சட்டத்திருத்த மசோதாவை பிரதமர் அலுவலக இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தாக்கல் செய்கிறார். இதையொட்டி, மக்களவை உறுப்பினர்களுக்கு மசோதா நகல் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
















