நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூர்வமான அலுவல் பணிகளை நடத்தவிடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் நிமிடத்திற்கு இரண்டரை லட்சம் ரூபாய் வீணாகி வருவதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கிய முதல் நாளில் இருந்து நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம் எதிரொலித்தது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பதவி நீக்க வலியுறுத்தியும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
கடந்த 21ஆம் தேதி பிரதமரின் வீட்டை முற்றுகையிட்டு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் நீட் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தவுள்ளதாக மத்திய அமைச்சர்கள் தெரிவித்தனர்.
தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவதை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வரப்படும் என பிரதமர் மோடியும் உறுதி அளித்தார்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியதால் ஒரு நிமிடத்திற்கு இரண்டரை லட்சம் ரூபாய் வீணானதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 5 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கியதால், பல கோடி ரூபாய் அளவுக்கு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், சிஜேபி போராட்டம், மத்திய அமைச்சர் பதவி விலகல் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளதால் இனி வரும் நாட்களில் நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சியினர் சுமுகமாக நடத்த விடுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
















