டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட வேண்டிய தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
டெல்டா மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி பருவங்களில் நெல் சாகுபடி மேற்கொள்வதற்காக மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ம் தேதி நீர் திறக்கப்படுவது வழக்கம். அதே நேரம், அணையில் நீர் இருப்பைப் பொறுத்து ஜூன் 12-ம் தேதிக்கு முன்பாகவோ அல்லது தாமதமாகவோ அணையில் இருந்து நீர் திறந்து விடப்படும்.
அணையில் குறைந்த பட்சமாக 90 அடி நீர் இருந்தால் மட்டுமே சாகுபடிக்காக தண்ணீர் முழுமையாக திறக்கப்படும்.
ஆனால் நடப்பு ஆண்டில் அணையின் நீர்மட்டம் 79.62 அடியாக மட்டுமே உள்ளதால் தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மின் தட்டுப்பாடு, நெற்பயிர்களில் தாக்கம் உள்ளிட்ட காரணங்களால் அவதி அடையும் விவசாயிகள் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படாததால் சாகுபடியின் அளவு 50 சதவீதம் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பாண்டுடன் சேர்த்து 62-வது முறையாக குறித்த நேரத்தில் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படாததால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
















