இந்திய விமானப்படை அதிகாரியின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்து அந்த ஆபாச வீடியோக்களைக் காட்டி கட்டாய மத மாற்றம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மும்பையில் உள்ள TCS நிறுவனத்தின் கிளை அலுவலகத்தில் நடந்த லவ் ஜிகாத் வழக்குகளின் தாக்கமே இன்னும் மக்கள் மனதில் மறையாத நிலையில், மற்றொரு லவ் ஜிகாத் மாடல் கொடூரம் நாக்பூரில் அரங்கேறியுள்ளது.
விமானப்படை அதிகாரியின் 24 வயதான மனைவிக்கு நடந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக சோனேகான் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி புகார் கொடுக்கப் பட்டுள்ளது. பாலியல் பலாத்காரம், மிரட்டிப் பணம் பறித்தல், மதமாற்ற முயற்சி மற்றும் ‘மகாராஷ்டிர மனித பலி மற்றும் பிற மனிதாபிமானமற்ற, தீய, அகோரி நடைமுறைகள் மற்றும் பில்லி சூனியம் தடுப்பு மற்றும் ஒழிப்புச் சட்டம்’ ஆகியவற்றின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய 26 வயதான அயாஸ் தாஜ் மதாரே மற்றும் 30 வயதான அமீன் ஷேக் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். மூன்றாவது குற்றவாளியான மத்தியப் பிரதேசத்தின் டாமியாவைச் சேர்ந்த ஹஸ்ரத் மௌலானாவைத் தேடும் பணி தீவிரப்படுத்தப் பட்டுள்ளது.
ஓராண்டுக்கு முன்பு நடந்த சம்பவம் என்றாலும், திருமணமானவர் என்பதால் ஏற்பட்ட அச்சத்தின் காரணமாக பாதிக்கப்பட்ட பெண் அமைதியாக இருந்ததாகவும், இறுதியில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு தனது கணவரிடம் உண்மையைச் சொன்னதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரியல் எஸ்டேட் துறையில் PROPERTY DEALING செய்துவரும் விமானப்படை அதிகாரியின் மனைவியைக் கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஒரு நிலத்தை வாங்குவது தொடர்பாக அவரது பள்ளிக்கால நண்பர் அயாஸ் தாஜ் மதாரே என்பவர் தொடர்புகொண்டு பேசியுள்ளார். பிறகு வார்தா சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வரவழைத்து மயக்க மருந்து கலந்த பழச்சாறு கொடுத்துள்ளார்.
மயங்கிய நிலையில் இருந்த இளம்பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதை வீடியோ மற்றும் புகைப்படங்களாகப் பதிவு செய்து மிரட்டி மூன்று லட்சம் ரூபாய் வரை அபகரித்துள்ளனர்.
போதைப்பொருள் கலந்த ஜூஸைக் கொடுத்து, அவர் மயக்க நிலையில் இருந்தபோது பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அந்தச் செயலை வீடியோ மற்றும் புகைப்படங்களாகவும் பதிவு செய்துள்ளனர்.
அந்த ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணை மிரட்டி, தொடர்ந்து பாலியல் ரீதியாகச் சுரண்டியதுடன், அவரிடமிருந்து 3.09 லட்ச ரூபாயைப் பறித்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், இஸ்லாம் மதத்தைத் தழுவுமாறு வற்புறுத்தப்பட்டதாகவும், மதச் சடங்குகள் என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அந்த இளம்பெண் தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த மே 31 அன்று, அயாஸ் அந்தப் பெண்ணை நாக்பூரில் உள்ள கல்மேஷ்வருக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு அமீன் ஷேக் மற்றும் ஹஸ்ரத் மௌலானா என்ற இஸ்லாமிய மதகுருவை அறிமுகம் செய்து வைத்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மூவரும் தன்னை ஒரு தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தனது விருப்பத்திற்கு மாறாக வலுக்கட்டாயமாக மதமாற்றச் சடங்குகள் நடத்தப்பட்டதாகவும் புகாரில் அந்த இளம் பெண் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கும் அயாஸ் தாஜ் மதாரேவுக்கும் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டதாகவும், தொடர்ந்து, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய மற்றொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ள அந்த இளம்பெண், ஆதாரமாக உள்ள வீடியோவையும் காவல் துறையினரிடம் கொடுத்துள்ளார்.
“என்னை விடுங்கள்” என்று பதற்றத்துடன் அந்த இளம்பெண் அலறும் அந்த வீடியோ வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில் விடுவித்துக்கொள்ளப் போராடும் இளம்பெண் மீது இஸ்லாமிய மத வசனங்களை ஓதியபடியும் அவர் மீது தொடர்ந்து ஊதியபடியும் அவரது கைகளை வலுக்கட்டாயமாகப் பிடித்துக்கொண்டிருக்கும் நபரையும் பார்க்க முடிகிறது.
வீடியோவில் இருக்கும் அந்த நபர், பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் முன்னாள் பள்ளி நண்பரான அயாஸ் தாஜ் மதரே என்பது குறிப்பிடத் தக்கது.
















