தருமபுரி மாவட்டத்தில் அபாயகரமான தொப்பூர் மலைப்பாதையை பாதுகாப்புமிக்க வழித்தடமாக மாற்றும் பணியை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மும்முரமாக செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் பொதுமக்களின் 78 ஆண்டுகால கனவு நிறைவேறும் நிலையில், இந்தத் திட்டம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு…
நாடு முழுவதும் ஆண்டுக்கு சுமார் நான்கரை லட்சம் சாலை விபத்துகள் பதிவாவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதில் மூன்றில் ஒரு பங்கு தேசிய நெடுஞ்சாலையில் மட்டுமே பதிவாவதாக புள்ளிவிவரம் கவலைக்குரிய தகவலை வெளியிட்டிருக்கிறது.
தருமபுரி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், பெங்களூரு – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூர் மலை பாதையில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்ததால், அதைத் தடுக்க வேண்டுமென பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்துவந்தனர். இதைத்தொடர்ந்து, தொப்பூர் மலைப்பாதையை பாதுகாப்புமிக்க சிறப்பு வழித்தடமாக மாற்றும் பணியை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் செவ்வனே செய்து வருகிறது.
அதிலும், அபாயகரமான வளைவுகளுடன் அடர் வனப்பகுதியின் நடுவில் உள்ள மலைப்பாதையை சீரமைத்து 6.6 கிலோமீட்டர் தூரத்திற்கு உயர் மட்ட பாலம் அமைக்கும் வகையில், இத்திட்டம் 905 கோடி ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் 83 இடங்களில் 8 மீட்டர் முதல் 50 மீட்டர் உயரத்தில் தூண்கள் அமைக்கப்படவுள்ளன.
வழக்கமாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ஒரு கிலோமீட்டர் தூர சாலை 50 கோடி ரூபாய் மதிப்பில் கட்டமைக்கப்படும் நிலையில், தொப்பூர் மலைப்பாதையின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, ஒரு கிலோமீட்டர் தூர சாலை 137 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது.
மேலும், மலைப்பாதையில் அதிவேகத்தில் வரும் வாகனங்கள் விபத்தில் சிக்குவதை தவிர்க்கும் வகையில், அபாயகரமான வளைவுகள் அனைத்தும் மேம்பாலங்கள் வாயிலாக நேராக்கப்பட்டு வருகின்றன. தற்போது தொப்பூர் மலைப்பாதை திட்டப் பணி 41 சதவீதம் முடிவடைந்த நிலையில், திட்டமிட்டப்படி வரும் 2028-ம் ஆண்டு மார்ச் மாதம் பணிகள் நிறைவடையும் என்கிறார் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட இயக்குநர் ஸ்ரீனிவாசலு.
தற்போது தொப்பூர் மலைப்பாதை நான்கு வழிச்சாலையாக உள்ள நிலையில், பாதுகாப்பு வசதிகளுடன் 5 வழிச்சாலையாக மேம்படுத்தப்படுகிறது. இதன் சிக்கல் மிகுந்த நில அமைப்பை கருத்தில் கொண்டு, நவீன பொறியியல் தொழில்நுட்பங்களுடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொப்பூர் மலைப்பாதை மேம்படுத்தப்படுவதன் மூலம் சேலம்- தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கால கனவு நனவாகும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
















