இந்தியா விரைவில் உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறும் என்றும், மேட் இன் இந்தியா 6ஜி தொழில்நுட்பத்தை நோக்கி இந்தியா வேகமாக பணியாற்றி வருவதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், ‘மெல்போர்ன் மீட்ஸ் மோடி’ என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி மெல்போர்னின் மார்வெல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், 30 ஆயிரம் இந்திய வம்சாவளியினர் திரண்டு பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மகிழ்ச்சி ஆரவாரத்துடன் மோடி..மோடி..என்று முழக்கமிட்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, தனது உரையை “வணக்கம் மெல்போர்ன்” என்று தமிழில் தொடங்கினார். தொடர்ந்து இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் வணக்கம் தெரிவித்ததால் இந்திய வம்சாவளியினர் உற்சாகத்துடன் ஆர்ப்பரித்தனர்.
இதைத்தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா உறவு மிகப்பெரிய உயரத்தை அடைந்துள்ளதாக தெரிவித்தார். கடந்த 12 ஆண்டுகளில் 3வது முறையாக ஆஸ்திரேலியாவுக்கு வருவதாகவும், இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் உறவு உணர்ச்சிப் பூர்வமானது என்றும் குறிப்பிட்டார். விரைவில் உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக ஆவதே இந்தியாவின் இலக்கு என்றும், இந்தியா தனது ‘ககன்யான்’ விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்பத் தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டார். இந்தியா உலகின் இரண்டாவது பெரிய 5ஜி சந்தையாக உருவெடுத்துள்ளதாகவும், மேட் இன் இந்தியா 6ஜி தொழில்நுட்பத்தை நோக்கி இந்தியா வேகமாக பணியாற்றி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதனிடையே, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீசுக்கு
நன்றி தெரிவிக்கும் வகையில் செல்போன் டார்ச்களை ஒளிரவிடுமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அரங்கில் இருந்த அனைவரும் தங்களது மொபைல் டார்ச்களை ஒளிரவிட்டனர். இதனை உணர்ச்சிப் பெருக்குடன் ஆஸ்திரேலிய பிரதமர் ஏற்றுக்கொண்டார்.
















