E20 பெட்ரோல் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், 2027-க்குள் E21 பெட்ரோலையும், 2029-க்குள் E25 பெட்ரோலையும் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மைலேஜ் குறைவு போன்ற பொதுமக்களின் கவலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த மாற்றம் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் எத்தனாலுக்கான கூடுதல் தேவையை உருவாக்கும் இந்தியாவின் உத்தியில், எத்தனால் கலப்புத் திட்டம் ஒரு முக்கியப் பகுதியாக மாறியுள்ளது.
2030 என்ற முந்தைய இலக்குக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே, நாடு முழுவதும் E20 பெட்ரோல் கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. இது நாட்டின் எத்தனால் கலந்த பெட்ரோல் என்ற திட்டத்தின் கீழ் நிகழ்ந்த மிக வேகமான மாற்றங்களில் ஒன்றாகும்.
E 20 ரக பெட்ரோல் நடைமுறைக்குக் கொண்டு வந்ததன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 4.5 கோடி பேரல் கச்சா எண்ணெயைச் சேமித்த இந்தியா சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய் அந்நியச் செலாவணியையும் சேமித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக மேலும் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் நோக்கத்தில் 25 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர மத்திய அரசு ஆய்வுப் பணிகளைத் தொடங்கியுள்ளது.
மத்திய அரசின் உத்தரவின் படி E10, E20 பெட்ரோல் கொண்டு இயக்கப்படும் வாகனங்களில் E21, மற்றும் E25 ரக பெட்ரோலை கொண்டு இயக்கி அதன் செயல் திறன் உள்ளிட்ட அனைத்து சோதனைகளையும் ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா பரிசோதித்து வருகிறது.
E25 பெட்ரோல் கொண்டு சுமார் 1,50,000 கிலோ மீட்டர் வரையில் இயக்கி மேற்கொள்ளப்படும் சோதனைகள் , அடுத்த ஆண்டு முடிவடையும் என்றும், ஆய்வின் முடிவுகளை International Centre for Automotive Technology என்ற அமைப்புக்கு அனுப்பி இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப் பட்டுள்ளது.
ஆய்வின் முடிவுகள் வெற்றிகரமாக முடியும் பட்சத்தில் இந்த E25 ரக பெட்ரோல் பெட்ரோல் பயன்பாட்டுக்கு வரும்.
அதிக எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு ஏற்றவகையில் இஞ்சின்களை வாகன உற்பத்தியாளர்கள் தயாரிக்கவும் அதற்கேற்ப , விநியோகச் சங்கிலிகள் மற்றும் உள்கட்டமைப்புகளைத் தயார் செய்யவும் போதுமான அவகாசம் அளிக்கப்படும் என்றும் எதிர்ப்பார்க்கப் படுகிறது.
E20 பெட்ரோல் பரவலாகக் கிடைக்கத் தொடங்குவதால், வாகனங்களின் இணக்கத்தன்மை மற்றும் எரிபொருள் திறன் குறித்து எழுப்பப்படும் கவலைகள் குறித்து அறிந்துள்ள மத்திய அரசு, இந்த மாற்றம் படிப்படியாகவும், தொழில்துறையின் தயார்நிலைக்கு ஏற்பவும் நடைமுறைப் படுத்தும் என்று கூறப்படுகிறது.
அமலுக்கு வரவிருக்கும் இந்த திட்டத்தால் வாகனங்களின் மைலேஜ், செயல் திறன் மற்றும் எத்தனால் கலப்புக்கு ஏற்ற தன்மை ஆகியவை குறித்த கேள்விகள் நுகர்வோர் மத்தியில் எழுந்துள்ளது.
















