அசாமில் வெள்ள பாதிப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெள்ள பாதிப்பால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும், 7 மாவட்டங்களில் நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளன. சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, அசாமில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மக்கள் பெற்றுள்ள அனைத்து வகையான கடன்களையும் திருப்பிச் செலுத்துவதற்கு 6 மாத கால அவகாசம் வழங்கி அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் பெய்து வரும் கனமழையால் அலக்நந்தா ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவைத் தாண்டி செல்கிறது. ருத்ரபிரயாக் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அலக்நந்தா ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் ரஜோரி பகுதியில் பெய்து வரும் கனமழையால் சுக்தோ ஆற்றின் நீர்மட்டம் மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 19-ம் தேதி சுக்தோ ஆற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால், சலால் நீர்மின் நிலையத்தின் மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது.
செனாப் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கையாக மதகுகள் திறக்கப்பட்டு உபரி நீர் வெளியேற்றப்பட்டது. மேலும், செனாப் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவும், ஆற்றின் அருகே செல்ல வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
















