அமெரிக்காவுடனான போரில் பெரும் இழப்புகளை ஈரான் சந்தித்தபோதிலும், ஒட்டுமொத்தமாக அந்நாட்டிற்கு வெற்றியே கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அது எப்படி என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு :
நவீனப் போர்கள் பெரும்பாலும் குறிப்பிட்ட லட்சிய நோக்கங்களுடன் தொடங்குகின்றன. ஆனால் மிகச் சிறிய அளவிலான சாதனைகளுடன்தான் பெரும்பாலான போர்கள் முடிவடைகின்றன.
ஈரானின் இராணுவத் திறன்களை முடக்கவும், அதன் அணுசக்தி லட்சியங்களை ஒழிக்கவும், அமெரிக்காவின் நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைக்கவும் ஈரான் மீது அமெரிக்கா போரைத் தொடங்கியது.
மத்திய கிழக்கில் அணுசக்தி கொண்ட நாடாக ஈரான் மாறிவிடக் கூடாது என்ற நோக்கத்தில் அந்நாட்டின் மீது தாக்குதலைகளைத் தொடங்கியது இஸ்ரேல்.
125 நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் போரில் அமெரிக்காவுக்கும், இஸ்ரேலுக்கும் அதன் போர் நோக்கங்கள்
முழுமையாக நிறைவேறியதாகத் தெரியவில்லை.
ஒருபுரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற கப்பல்களை ஈரான் தாக்கியதை அடுத்து ஈரான் மீது தொடர்ச்சியாக 13 நாட்கள் தாக்குதல்கள் நடத்திய அமெரிக்கா அதை நிறுத்தியது. ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக அதிபர் ட்ரம்ப் அறிவித்தார்.
மறுநாளே ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளம் மீது பாலிஸ்டிக் ஏவுகணைகளால் ஈரான் தாக்குதல் நடத்தியது. பதிலுக்கு ஈரான் மீது அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் தாக்குதல் நடத்தியுள்ளன.
இத்தனைக்கும் நடுவில் இஸ்ரேல் இன்னும் பலமுடன் உள்ளது. முன்னை விட மத்திய கிழக்கில் அமெரிக்கா ஆழமாக காலூன்றியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்படாமல் உள்ளது. சவூதி, அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இஸ்ரேல், லெபனானில் யூதர்களுக்கான நிலப்பரப்பைத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.
ஈரான் தனது போர்க்கால நோக்கங்களை அடைவதில் தோல்வியடைந்ததாகவே கருதப்படுகிறது. அமெரிக்காவும் இஸ்ரேலுமே நினைத்து பார்க்காத அளவுக்கு ஈரான் சிதைந்துள்ளது. தலைநகர் உட்பட எல்லா நகரங்களும் குண்டுவீச்சில் தரைமட்டமாக்கப் பட்டுள்ளன. பாலங்கள் மின் உற்பத்தி நிலையங்கள் ரயில்வே தடங்கள் எண்ணெய் உற்பத்தி மற்றும் சேமிப்பு நிலையங்கள் என ஒட்டுமொத்த உள்கட்டமைப்புகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
இந்தப்போரில் இராணுவரீதியாக வெற்றிப் பெறாத ஈரான் தப்பிப் பிழைத்திருப்பதே அதன் வெற்றி என்று கூறப்படுகிறது.
இத்தனைக்கும் பிறகும் தனது தலைமையை ஈரான் இழக்கவில்லை. ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை முழுமையாக இழக்கவில்லை. ஜலசந்தியை முறையாக மூடாமலேயே எரிசக்தி விலைகளில் செல்வாக்கு செலுத்தும் திறன் தன்னிடம் உள்ளது என்பதை ஈரான் உலகிற்கு நினைவூட்டியது. எப்போதும் ஹார்முஸ் ஜலசந்தி தனக்கு பேரம் பேச உதவும் கருவி என்பதையும் தெளிவாக காட்டியது.
இஸ்லாமிய புரட்சிகர காவல்படையினர் தொடர் மற்றும் திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். அதாவது அந்நிய சக்திகள், அமெரிக்காவே ஆனாலும் அந்தச் சக்திகளால் தனது எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியாது என்பதை ஈரான் உலகத்துக்கு எடுத்து காட்டியுள்ளது.
அதிக மதிப்புள்ள பாதுகாப்பு ஆயுதங்களைப் பயன்படுத்தும்படி அமெரிக்காவைக் கட்டாயப்படுத்தியதன் மூலம், ஈரான் போர்க்களத்திற்கு அப்பாற்பட்ட அதிகமான செலவுகளை அமெரிக்காவுக்கு ஏற்படுத்தியது.
மற்ற வளைகுடா நாடுகளுக்கு அந்நாடுகள் எவ்வளவு பாதுகாப்பற்ற நிலையில் இருக்கின்றன என்பதை ஈரான் கோடிட்டு காட்டியுள்ளது.
இந்தச்சூழலில் ஹோர்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஓமனுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று கூறிய ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, அமெரிக்காவின் நடத்தை எந்த விதிகளையும் சட்டங்களையும் பின்பற்றாத ஒரு மாஃபியா கும்பலைப் போல் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
வெற்றியைப் பற்றி அல்ல, பொறுமையைப் பற்றிப் பேசிய அதிபர் ட்ரம்ப், ஏதாவது நல்லது நடப்பதற்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக கருதுவதாக கூறியுள்ளார்.
தொடங்கிய போரை தொடங்கிய வேகத்திலேயே முடிக்க முடியாமல் தவிக்கும் நிலைக்கு அமெரிக்கா வந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு வலிமையான எதிரி விரும்பிய முடிவை மறுப்பது மட்டுமே ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதப்படும் என்ற புதிய மொழியில் தனது வெற்றியை உரக்கச் சொல்லியுள்ளது ஈரான்.
















