அமெரிக்கா- சவூதி அரேபியா இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் இதுவரை, அணு ஆயுதம் கொண்ட ஒரே இஸ்லாமிய நாடு என்ற பெருமையாக சொல்லிவந்த பாகிஸ்தானை சர்வதேச அளவில் தனிமைபடுத்தியுள்ளது. மேலும் மத்திய கிழக்கில் ஒரு புதிய அணுசக்தி முக்கோணத்தை உருவாக்கும் முதல்படியாக அதிபர் ட்ரம்பின் இந்த நடவடிக்கை அமைந்திருப்பதாக கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அணுசக்தி கொண்ட ஒரே இஸ்லாமியநாடு என்ற காரணத்தால் உலக அளவில் இஸ்லாமிய நாடுகளுக்கான ஒரே பாதுகாவலர் என்ற சுய பிம்பத்தில் பாகிஸ்தான் இருந்து வந்தது.
நீண்ட காலமாக அணுசக்தி நாடாக மாற வேண்டும் என்ற லட்சியத்துடன் சவூதி அரேபியா இருந்துவருகிறது. இதன் ஒரு பகுதியாகவே கடந்த ஆண்டு பாகிஸ்தானுடன் ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தத்தின் படி, சவூதி அரேபியா அணுசக்தித் திறனைப் பெற பாகிஸ்தான் மறைமுகமாக உதவக் கூடும் என்று கூறப்பட்டது.
வளைகுடாவில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்திவரும் நிலையில், ஈரான் அணுகுண்டு தயாரித்தால் சவூதி அரேபியாவும் உடனடியாக அணுகுண்டு தயாரிக்கும் என சவூதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பகிரங்கமாகக் கூறியிருந்தார்.
மோசமடைந்து வரும் பாதுகாப்புச் சூழலில், அணுசக்திப் பாதுகாப்பை ஒரு அவசியமான காப்பீட்டுக் கொள்கையாக சவூதி அரேபியா கருதுகிறது என்பதைப் பட்டத்து இளவரசரின் அறிவிப்பு சுட்டிக் காட்டியது.
ஏற்கெனவே சீன அரசுக்குச் சொந்தமான சைனா நேஷனல் நியூக்ளியர் கார்ப்பரேஷன், 2023-ல் சவூதியில் அணுமின் நிலையம் கட்டுவதற்கான ஏலத்தில் விண்ணப்பித்திருந்தது.
எகிப்தில் அணுமின் நிலையத்தைக் கட்டிய ரஷ்யாவும், சவூதியில் அணுமின் நிலையம் கட்டுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் அணு உலைகளைக் கட்டிய தென் கொரியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் சவூதியில் அணுமின் நிலையம் கட்டுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றன.
இந்தப் பின்னணியில் மற்ற வல்லரசுகளுடன் சவூதி கை கோர்க்காமல், அமெரிக்காவை மட்டும் சார்ந்திருக்கும் வகையில் அந்நாட்டுடன் அணுசக்தி ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் ஏற்ப்டுத்தியுள்ளார்.
செறிவூட்டல் மற்றும் மறுசுழற்சியை வெளிப்படையாகத் தவிர்த்த ஐக்கிய அரபு அமீரகத்துடனான “தங்கத் தர” ஒப்பந்தத்தைப் போலல்லாமல், சவூதியுடனான ஒப்பந்தம் வேறுபட்டதாக அமைந்துள்ளது.
அதாவது, சவூதி அரேபியாவில் “பிளாக் பாக்ஸ்” எனப்படும் ஒரு செறிவூட்டும் வசதியை உருவாக்கி, அந்தத் தொழில்நுட்பத்தின் மீதான பெயரளவிலான கட்டுப்பாட்டை அமெரிக்கா தக்க வைத்துக் கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் , சர்வதேச அணுசக்தி முகமையின் சர்வதேச மேற்பார்வைக்கான “கூடுதல் நெறிமுறை” இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
கூடுதலாக அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாகச் செயல்படுத்துவதற்கு, விரிவாக்கப்பட்ட ஆபிரகாம் ஒப்பந்தத்தை சவூதி அரேபியா ஏற்கவேண்டும் என்றும், இஸ்ரேலை ஒரு தனி சுதந்திர நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற நிபந்தனையையும் அதிபர் ட்ரம்ப் வைத்துள்ளார்.
இது இஸ்ரேலுடன் அமைதி மற்றும் அமெரிக்கத் தலைமையின் கீழ் ஒரு வலுவான ஈரான் எதிர்ப்பு கூட்டணியை அதிபர் ட்ரம்ப் உருவாக்கியுள்ளார் என்று கூறப்படுகிறது.
இன்னொருபுறம் அணு ஆயுதத் தடுப்புப் பணிகளை பாகிஸ்தானிடம் ஒப்படைப்பதை விட அமெரிக்கா, இந்தியா மற்றும் இஸ்ரேலுடனான நல்லுறவுகளுக்கே சவூதி முன்னுரிமை காட்டத் தொடங்கியுள்ளது.
அமெரிக்க- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறினால் இன்னும் 10 ஆண்டுகளில் மத்திய கிழக்கில் சவூதி, இஸ்ரேல் ஈரான் என்ற மூன்று அணுசக்தி நாடுகள் இருக்கும்.
இது துருக்கி, எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம்போன்ற நாடுகளை அணுசக்தி பாதுகாப்பைத் தேட வைக்கும். இந்த புதிய அணுசக்தி முக்கோணத்தில், பாகிஸ்தான் அதன் இருப்பால் அல்ல ஒப்பீட்டு இல்லாமையால் தனித்து விடப்படும். குறிப்பாக காலப்போக்கில், பாகிஸ்தான் தவிர்க்க முடியாத முஸ்லிம் அணுசக்தி நாடாகக் கருதப்படாமல், பல நாடுகளில் ஒரு நாடாக மட்டுமே மதிக்கப்படும்.
















