சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து இரண்டு புறநகர் ரயில்கள் சென்றதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானது என தெற்கு ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை கடற்கரை – தாம்பரம் மார்க்கத்தில் எழும்பூர் நோக்கி புறநகர் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. திடீரென அந்த ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து அதே தண்டவாளத்தில் மற்றொரு புறநகர் ரயில் சென்ற நிலையில், அந்த ரயிலும் நிறுத்தப்பட்டது. ஒரே தண்டவாளத்தில் அடுத்தடுத்து இரு ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.
இதேபோல் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் புறநகர் ரயில் பாதியில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் அவதியடைந்தனர். தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற ரயில் பூங்கா ரயில் நிலையத்தில் திடீரென நிறுத்தப்பட்டது. 30 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டு சென்றது.
இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள தெற்கு ரயில்வே, ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் ஒன்றையொன்று நோக்கி நகர்ந்து கொண்டிருந்தன என்ற கூற்று முற்றிலும் பொய்யானது எனத் தெரிவித்துள்ளது.
பயணிகளின் பாதுகாப்பையும் ரயில் செயல்பாடுகளின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, ரயில்களைத் தற்காலிகமாக நிறுத்தி ஒழுங்குபடுத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. நிறுவப்பட்ட சிக்னல் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு ஏற்பவே மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
















