மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது.
பொதுத்தேர்வு முறைகேடு தடுப்பு மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அறிமுகப்படுத்தினார்.
அப்போது பொதுத் தேர்வை ஒழுங்குபடுத்துவதற்காக தேசிய தேர்வு முகமையை கடந்த 1992-இல் காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே ஏற்படுத்த வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும், அக்கட்சியால் அதை நிறைவேற்ற முடியவில்லை என ஜிதேந்திர சிங் கூறினார்.
அத்துடன் பிரதமர் மோடி கடந்த 2017-இல் தேசிய தேர்வு முகமையை அமைத்து சாதித்துக் காட்டியதற்காக அவருக்கு காங்கிரஸ் நன்றிகூற வேண்டுமென அவர் தெரிவித்தார்.
இதையடுத்து மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது.
வினாத்தாள் கசிவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, தனிநபர்களுக்கு 50 லட்சம் ரூபாய் வரை அபராதம், ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்களுக்கு 10 கோடி ரூபாய் வரை அபராதம், வழக்கில் 3 மாதங்களுக்குள் தீர்ப்பு உள்ளிட்டவை மசோதாவில் இடம்பெற்றுள்ளன. வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதாவில் திமுக உறுப்பினர்கள் முன்மொழிந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன.
மேலும் வாக்கெடுப்புக்கு முன்பே இண்டி கூட்டணி வெளிநடப்பு செய்தது. அதனை தொடர்ந்து மாநிலங்களவை இன்று காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக மாநிலங்களவை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
















