தேசிய பாடலான வந்தே மாதரத்தை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யும் மசோதா மக்களவையில் நீண்ட விவாதத்துக்குப் பிறகு நிறைவேறியது.
மாநிலங்களவையில் இந்த மசோதா ஏற்கெனவே நிறைவேறிய நிலையில், மக்களவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மசோதாவுக்கு ஆட்சேபம் தெரிவித்து பேசிய திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி, இம்மசோதா நாட்டை பிளவுபடுத்துவதுடன், கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என கூறினார்.
கனிமொழியை தொடர்ந்து திமுக எம்.பி. ஆ.ராசா உள்ளிட்டோரும் வந்தே மாதரம் மசோதாவுக்கு எதிராக குரல் கொடுத்தனர். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய இணையமைச்சர் நித்யானந்த் ராய், எந்தவொரு தனிநபரையோ அல்லது மாநிலத்தையோ குறிவைத்து இந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை என்றும், தேசிய பாடலுக்கான கெளரவத்தை உறுதிப்படுத்துவதான் மசோதாவின் நோக்கம் என்றும் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் அமளிக்கு மத்தியில் குரல் வாக்கெடுப்பு வாயிலாக வந்தே மாதரம் மசோதா நிறைவேறியது. குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்ததும் இம்மசோதா சட்டவடிவம் பெறுவது குறிப்பிடத்தக்கது.
















