மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என்றும், சுற்றுச்சூழல் அனுமதி நிலுவையில் உள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்பி சுதா எழுப்பிய கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அதில், மேகதாது திட்டத்திற்கான ஆய்வு வரம்புகளுக்கு அனுமதி கோரி கர்நாடக அரசு கடந்த 2019-ம் ஆண்டு விண்ணப்பித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் விவகாரத்துடன் தொடர்புடையது என்பதால், மத்திய ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே மேகதாது திட்டத்துக்கான செயல்பாட்டு வரையறைகள் வழங்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேகதாது திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட பின்னரே, இத்திட்டத்திற்கான செயல்பாட்டு வரையறைகள் வெளியிடப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இத்திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதல் இன்னும் வழங்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
காவிரி வடிநிலப் பகுதியில் புதிதாக கொண்டு வரப்படும் எந்தவொரு திட்டமும், உச்ச நீதிமன்றத்தின் 2018-ம் ஆண்டு தீர்ப்பு மற்றும் மத்திய நீர் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டே மதிப்பீடு செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















