கேரளாவில் பெய்து வரும் அதி தீவிர கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த 31ஆம் தேதி முதல் பெய்து வரும் அதிதீவிர கனமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இடுக்கி, வாகமண், கோட்டயம் மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிலச்சரிவு, வெள்ளம் மற்றும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.
6 மீனவர்கள் கடலில் மாயமாகியுள்ள நிலையில், கண்ணூரில் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேரை மீட்புக்குழுவினர் தேடி வருகின்றனர்.
மாநிலம் முழுவதும் 65 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு, ஆயிரத்து 465 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட பல்வேறு துறையினர் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், தொடர் கனமழையை முன்னிட்டு கேரளாவின் 12 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
மேலும், பம்பை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக சபரிமலை பயணத்தை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு பக்தர்களுக்கு தேவஸ்வம் போர்டு அறிவுறுத்தியுள்ளது.
















