குஜராத் எல்லையில் உள்ள சர் க்ரீக் (Sir Creek) பகுதியில் பாகிஸ்தான் தனது கடற்படை மற்றும் ராணுவ உள்கட்டமைப்பைத் தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது. சீனா மற்றும் துருக்கியின் உதவியுடன் புதிய கடற்படைச் சாவடிகள், ஏவுகணை அமைப்புகள் மற்றும் சிறப்புப் படைகளைக் குவித்து வருவதுடன், ‘அபாபீல்’ (Ababeel) என்ற பெயரில் புதிய பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
சர் க்ரீக் (Sir Creek) என்பது குஜராத்தின் கட்ச் பகுதியில் உள்ள 96 கிலோமீட்டர் நீளமுள்ள ஒரு அலை முகத்துவாரமாகும்.
இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள இந்த இயற்கையான எல்லைப் பகுதி ஆசியாவின் மிகப்பெரிய மீன்பிடித் தளங்களில் ஒன்றாக விளங்குகிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்கள் அதிகம் கொண்ட இந்தப் பகுதி முழுமையும் தனக்கே சொந்தம் என்று பாகிஸ்தான் கூறிவருகிறது.
இரு நாடுகளுக்கு இடையேயான எல்லையை நிர்ணயிக்கும் சர்வதேச எல்லைச் சட்டமான தால்வெக் கோட்பாடு (Thalweg Principle) அடிப்படையில் படகு போக்குவரத்து நடக்கும் நடுகூட்டுப் பகுதியில் எல்லை பிரிக்கப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்திவருகிறது.
பாகிஸ்தானின் வர்த்தகத் தலைநகரமும், துறைமுக நகரமுமான கராச்சி மற்றும் முக்கிய கடற்படைத் தளமான பி.என்.எஸ் காசிம் ஆகியவற்றிலிருந்து வெறும் 200 கிலோமீட்டர் தொலைவில் சர் க்ரீக் அமைந்துள்ளது. அதே போல் இந்தியாவின் காண்ட்லா, முந்த்ரா மற்றும் மாண்ட்வி உள்ளிட்ட மிகப்பெரிய துறைமுகங்கள் கட்ச் வளைகுடாவில் இந்தப்பகுதியில் தான் அமைந்துள்ளன.
இருநாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் ஒரு முக்கியமான எல்லைப் பிரச்சனையாக அமைந்துள்ள இந்தப் பகுதியில் கடந்த ஆண்டு மே 8ம் தேதி இரவு, லே முதல் சர் க்ரீக் வரையிலான 36 இடங்களில், சுமார் 400க்கும் மேற்பட்ட துருக்கியின் ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் ஊடுருவல் முயற்சி செய்தது.
இது இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளைச் சோதிக்கும் நோக்கில் செய்யப்பட்டிருக்கலாம் என்றும், பின்னர் ஆயுதம் ஏந்திய ட்ரோன்கள் மூலம் பதிண்டா ராணுவ முகாமைத் தாக்க முயன்றதாகவும் தெரிவித்த விங் கமாண்டர் வியோமிகா சிங், இதற்குப் பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள நான்கு வான் பாதுகாப்பு தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு அந்நாட்டின் ஒரு வான் பாதுகாப்பு ரேடார் அமைப்பு அழிக்கப்பட்டதாக கூறியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து சர் கிரீக் பகுதியில் பாகிஸ்தான் மேற்கொள்ளும் எந்தவொரு அத்துமீறலும், “வரலாற்றையும் புவியியலையும் மாற்றக்கூடிய” கடுமையான இந்தியப் பதிலடியை வரவழைக்கும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் National Strategic Command என்ற அமைப்பை உருவாக்கிய பாகிஸ்தானின் ஃபீல்ட் மார்ஷல் அசிம் முனீர், இந்த ஒருங்கிணைந்த கட்டளையின் கீழ் பாகிஸ்தானின் முப்படைகளின் செயல்பாடுகளை மேற்பார்வையிட்டு வருகிறார்.
இதன் ஒருபகுதியாக சர் க்ரீக் (Sir Creek) பகுதியில், சீனா மற்றும் துருக்கியின் உதவியுடன் பாகிஸ்தான் புதிய வான் மற்றும் கடல் பாதுகாப்புத் திட்டத்தைச் செயல்படுத்தத் தொடங்கியுள்ளது.
“Ababeel – The Divine Strike”. “அபாபீல் – தி டிவைன் ஸ்ட்ரைக்” என்ற புதிய திட்டத்தின் கீழ் பாகிஸ்தான் கடற்படை தனது கடற்படை சிறப்பு சேவை குழு (SSG-N) கமாண்டோக்களை சர் க்ரீக்கில் நிலைநிறுத்தியுள்ளது. SSG-N என்பது கடல், வான் மற்றும் தரைவழி என அனைத்துத் தளங்களிலும் அதிக ஆபத்துள்ள பணிகளை மேற்கொள்ளப் பயிற்சி பெறும் ஒரு கடல்சார் சிறப்பு நடவடிக்கைப் படை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வெடிமருந்துகளைச் சுமந்து செல்லும் திறன் கொண்ட புதிய துருக்கி ட்ரோன்கள், நவீன சீன hovercraft ஹோவர்கிராஃப்ட்கள், அதிவேகக் கடற்படைப் படகுகள் மற்றும் அதிநவீன ராக்கெட் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளைப் பாகிஸ்தான் சர் க்ரீக் (Sir Creek) பகுதியில் நிலைநிறுத்தியுள்ளது.
உளவு பார்த்தல் மற்றும் தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட துருக்கி ட்ரோன்களை அதிக அளவில் சர் க்ரீக் (Sir Creek) பகுதியில் பாகிஸ்தானால் களமிறக்கப்பட்டுள்ளன
பாகிஸ்தானுக்கு முதல் ஹங்கோர்-வகை நீர்மூழ்கிக் கப்பலை வழங்கியுள்ள சீனா அந்நாட்டுக்கு அரபிக்கடலில் மறைந்திருந்து தாக்கும் மேம்பட்ட திறனையும், இரண்டாவது தாக்குதல் நடத்தும் ஆற்றலையும் வழங்கியுள்ளது.
மேலும் பாகிஸ்தானுக்கு துக்ரில் வகைப் போர்க்கப்பல்களையும் சீனா வழங்கியுள்ள நிலையில், சர் க்ரீக் நதிக்கரைப் பகுதிக்கு அருகிலுள்ள பந்தா தோரா மற்றும் ஹராமி தோரா பகுதிகளுக்கு இடையில் பல கடல்சார் பாதுகாப்பு நிலைகளைப் பாகிஸ்தான் கடற்படை அமைத்துள்ளது.
சர்ச்சைக்குரிய சதுப்பு நிலமான சர் க்ரீக் பகுதிகளில் பாகிஸ்தான் தனது ராணுவத்தை குவித்து வருவதாலும் இந்தியா “தீர்க்கமான பதிலடி” கொடுக்கும் என எச்சரித்துள்ளதாலும், இருநாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
















