பிறப்புரிமை அடிப்படையில் அமெரிக்க குடியுரிமை பெறுவதைத் தடுப்பதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இரண்டு முக்கிய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார். இந்த இரண்டு புதிய நிர்வாக ஆணைகளும் எதைக் குறிக்கின்றன? இதனால் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்களா? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
அமெரிக்க அரசியலமைப்பின் 14-வது திருத்தச் சட்டத்தின் கீழ் அமெரிக்க மண்ணில் பிறக்கும் குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்கப்படுகிறது.
இந்த விதியின் படி, அமெரிக்காவில் நடைபெறும் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த அதிபர் ட்ரம்ப் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகிறார்
இரண்டாவது முறை அதிபரானதும் ட்ரம்ப் பிறப்பித்த புதிய பிறப்புரிமை குடியுரிமை உத்தரவை, அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கூறி கடந்த ஜூன் மாத இறுதியில் அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
நீதிமன்றத் தீர்ப்பின் பின்னடைவைத் தொடர்ந்து, புதிய அணுகுமுறையுடன் மீண்டும் இரண்டு நிர்வாக உத்தரவுகளைத் அதிபர் ட்ரம்ப் பிறப்பித்துள்ளார்.
பிறப்புரிமை குடியுரிமை (birthright citizenship) விவகாரத்தில் ஒரு துரதிர்ஷ்டவசமான முடிவை எடுத்ததன் மூலம் பிறப்புரிமை குடியுரிமையை உச்ச நீதிமன்றம் கேலிக்கூத்தாக்கிவிட்டதாக என்று கூறியுள்ள அதிபர் ட்ரம்ப்
மிகவும் நியாயமற்ற அந்த நடவடிக்கையைச் சரி செய்ய தேவையான மாற்றங்களைச் செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ள முதல் உத்தரவு பிறப்புரிமை குடியுரிமை பெறத் தகுதியற்ற குழந்தைகளுக்கான வரையறையை விரிவுபடுத்தியுள்ளது. வெளிநாட்டு பயங்கரவாத அமைப்புகளின் உறுப்பினர்களின் குழந்தைகள் மற்றும் வெளிநாட்டு அரசுக்குச் சார்பாக செயல்படும் நபர்களின் குழந்தைகளும் இந்தத் தகுதியற்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகையின் துணைப் பணியாளர் தலைவரும், டிரம்பின் குடியேற்ற எதிர்ப்புத் திட்டத்தின் முக்கிய வடிவமைப்பாளருமான ஸ்டீபன் மில்லர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் “எதிரி நாட்டுப் பிரஜை” (alien enemy) எனக் கருதப்படுபவர்களின் குழந்தைகளும் அதிக எண்ணிக்கையிலான வெளிநாட்டு அரசு ஊழியர்களின் குழந்தைகளும் இதில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமில்லாமல் கூட்டாட்சி சட்டத்தின் மூலம் குடியுரிமை வழங்கப்படாத அமெரிக்கப் பிரதேசம் அல்லது அதன் கடல் எல்லைப் பகுதிகளில் பிறந்தவர்களும் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் இந்த ஆணை குறிப்பிடுகிறது. குடியுரிமையைப் பெறுவதற்காக மோசடியான செயல்களில் ஈடுபட்ட பெற்றோரின் குழந்தைகளுக்கும் பிறப்புரிமை குடியுரிமை மறுக்கப்படும் என்று கூறப் பட்டுள்ளது.
தனது இரண்டாவது உத்தரவின் மூலம், பிரசவ சுற்றுலா’வை தடை செய்துள்ள அதிபர் ட்ரம்ப், இத்தகைய பயணங்களை ஏற்பாடு செய்யும் நபர்களையும் நிறுவனங்களையும் குறிவைக்குமாறு கூட்டாட்சி முகமைகளுக்கு வலியுறுத்தியுள்ளார்.
ஆயிரக்கணக்கானோர் பிரசவ சுற்றுலாவில் ஈடுபடுவதாக அதிபர் ட்ரம்ப் கூறியிருந்தாலும் அரசு புள்ளிவிவரங்கள் அதை உறுதிப்படுத்தவில்லை.
அமெரிக்காவில் நிகழும் சுமார் 36 லட்சம் பிரசவங்களில் பிரசவ சுற்றுலா வகையின் கீழ் 2020-ல் Center for Immigration Studies அமைப்பின் மதிப்பீட்டின்படி, ஆண்டுக்கு 20,000 முதல் 25,000 தாய்மார்கள் இத்தகைய நடவடிக்கையில் ஈடுபடுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவிற்கு மேற்கொள்ளப்படும் பிரசவ சுற்றுலாவில், சீனாவும் இந்தியாவும் முன்னணியில் உள்ளன.
H-1B விசா உள்ளிட்ட விசாக்களில் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களை, அமெரிக்காவில் குழந்தையைப் பெற்றெடுப்பதற்காகக் குறுகிய காலப் பார்வையாளர் விசாவில் செல்லும் பிரசவ சுற்றுலாப் பயணிகள் என்று கருதப்படுவதில்லை. எனவே அதிபர் ட்ரம்பின் புதிய உத்தரவுகளால் அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று கூறப்படுகிறது.
ஆனாலும் குறுகிய காலப் பார்வையாளர் விசாவுக்கு விண்ணப்பிக்கும் இந்தியர்களை இந்த உத்தரவுகள் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் தங்கள் பயணத்தின் நோக்கம் குறித்துக் கடுமையான சோதனைகளை எதிர்கொள்ள நேரிடலாம் என்றும், விசா கிடைத்தாலும் விமான நிலையங்களில் கூடுதல் கேள்விகள் கேட்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
ஆதாரம் இல்லாவிட்டாலும், பிரசவ சுற்றுலா குறித்த சந்தேகம் எழுந்தாலே விசா விண்ணப்பங்களை நிராகரிக்கும் அதிகாரத்தை இந்தப் புதிய நிர்வாக உத்தரவுகள் விசா அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளன.
இதற்கிடையே பிறப்புரிமை குடியுரிமையை ரத்து செய்வதற்கான மற்றொரு அரசியலமைப்புக்கு முரணான முயற்சியே ட்ரம்பின் இந்த உத்தரவுகள் என்று அமெரிக்க சிவில் உரிமைகள் சங்கம் கூறியுள்ளது.
அமெரிக்க குடியேற்றச் சட்ட வழக்கறிஞர் சைரஸ் மேத்தாவும் இந்த உத்தரவு வெளிப்படையாகவே அரசியலமைப்புக்கு முரணானது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கெனவே நடந்தது போலவே, இந்த உத்தரவுகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே நீதிமன்றங்களால் ரத்து செய்யப்படும் என்று குடியேற்ற உரிமை ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
















