கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மிகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழாரம் சூட்டியுள்ளார்.
நாட்டின் மிக உயரிய காவல்துறை கவுரவங்களில் ஒன்றான குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி அங்கீகாரம் புதுச்சேரி காவல்துறைக்கு வழங்கப்படும் என கடந்த மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்திருந்தார்.
அதன்படி, புதுச்சேரி கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்ற வண்ணக்கொடி அங்கீகார விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழா தொடக்கத்தில் குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடிக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் மற்றும் சீக்கிய மத குருமார்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட அமித்ஷா, குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி அங்கீகாரத்தை புதுச்சேரி காவல்துறை இயக்குநர் ஷாலினி சிங்கிடம் அதிகாரப்பூர்வமாக வழங்கினார்.
தொடர்ந்து, புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 2-வது இந்திய ரிசர்வ் பட்டாலியன் பிரிவை தொடங்கி வைத்த மத்திய அமைச்சர் அமித்ஷா, காவல்துறையினரின் அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, சர்தார் வல்லபாய் பட்டேலின் 150-வது பிறந்த நாள் ஆண்டு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த தேசிய ஒருமைப்பாட்டு கண்காட்சியையும் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், தலைமைச் செயலர், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் ஆன்மீகத்தின் சிறப்பிடமாக புதுச்சேரி திகழ்கிறது எனக் கூறினார். மகரிஷி, அன்னை, ஸ்ரீ அரவிந்தர் மற்றும் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஆகியோரின் பங்களிப்பால் புதுச்சேரி தனித்துவமான அடையாளத்தை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி அங்கீகாரம் என்பது சாதாரண விருது அல்ல என்றும், புதுச்சேரி காவல்துறையின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் வீரத்துக்கு கிடைத்த உயரிய தேசிய கவுரவம் எனவும் பாராட்டினார்.
5 ஆயிரம் காவலர்கள் மட்டுமே கொண்ட புதுச்சேரி காவல்துறை சட்டம்-ஒழுங்கை சிறப்பாக பராமரித்து மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் யூனியன் பிரதேசங்களில் மக்களுக்கு சிறப்பாக சேவை செய்த காவல்துறையாக புதுச்சேரி காவல்துறை விளங்கியதாகவும், அந்த அர்ப்பணிப்பு காவல்துறையின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட வேண்டியது எனவும் அமித்ஷா தெரிவித்தார்.
முன்னதாக பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது கிடைத்தது புதுச்சேரி காவல்துறைக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை எனக் கூறினார்.
ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதற்கு காவல்துறையினர் உருவாக்கியுள்ள பாதுகாப்பான சூழலே முக்கிய காரணம் எனக்கூறிய அவர், காவல்துறையினரின் கடமை உணர்வு, தைரியம், ஒழுக்கம் மற்றும் நேர்மையான சேவைக்கு கிடைத்த அங்கீகாரம் என புகழாரம் சூட்டினார்.
புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி குற்றங்களை தடுப்பதிலும், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதிலும் புதுச்சேரி காவல்துறை முன்னணியில் இருப்பது பெருமைக்குரியது எனவும் குறிப்பிட்டார்.
மேலும், புதுச்சேரி காவல்துறையை வலுப்படுத்த தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கி வரும் பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் ரங்கசாமி நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
















