அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களுக்கு கொடுக்கப்படும் பதவி லஞ்சமாகத்தான் கருதப்படும் என்று, திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் தெரிவித்துள்ளார்.
விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக ஆஜராகி நிபந்தனை ஜாமினில் கையெழுத்திட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் நிலைப்பாடு குறித்து சரியான முடிவை சரியான நேரத்தில் திமுக தலைவர் எடுப்பார் என்றார்.
மதுவின் மூலம் கூடுதலாக ஐந்தாயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டுவோம் என்று தவெக அரசு கூறுவது வேதனை அளிப்பதாக தெரிவித்த மார்க்கண்டேயன், அதிமுகவில் இருந்து விலகி, தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்களுக்கு பதவி வழங்குவது லஞ்சம் வழங்குவது போன்றது என்று விமர்சித்தார்.
















