பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, பரிசோதனைகள் முடிந்து மருத்துவர்களின் அனுமதியைப் பெற்ற பின்னர் மீண்டும் பலத்த பாதுகாப்புடன் அடியாலா சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
இம்ரான்கானுக்குத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து, அவரை மருத்துவ மனைக்குக் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்துக்குச் சிறை அதிகாரிகள் தள்ளப் பட்டனர்.
தோஷ்கானா’ (Toshkhana) வழக்கில் தண்டனை பெற்று கடந்த 2023 முதல் இம்ரான்கான், அடிலா சிறையில் அடைக்கப்பட்டிருந்த இம்ரான்கான் வியாழக்கிழமை இரவே மருத்துவமனைக்குச் செல்ல விரும்பவில்லை. ஒருவழியாக சிறையிலிருந்து வெளியே அழைத்துச் செல்ல சிறை அதிகாரிகள் அவரைச் சம்மதிக்க வைத்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை சூரிய உதயத்திற்கு முன்பே விடியற்காலை, பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரம் பரபரப்பானது. முன்னாள் பிரதமர் இம்ரான் கானை ஒருமுறை பார்த்துவிட வேண்டும் என்ற விருப்பத்தின் காரணமாக அடிலா சிறையைச் சுற்றியுள்ள வீதிகளிலும், தலைநகரில் உள்ள ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்குச் செல்லும் பாதைகளிலும் பெருமளவில் மக்கள் திரண்டிருந்தனர்.
ஏற்கெனவே பொதுமக்களின் “உயிர், உடைமை மற்றும் கண்ணியம்” ஆகியவற்றைப் பாதுகாத்தல், “பயங்கரவாதச் செயல்களுக்கு எதிரான பாதுகாப்பை” உறுதி செய்தல், பொது அமைதியைப் பேணுதல் மற்றும் போக்குவரத்து சீராக நடைபெறுவதை உறுதி செய்தல் ஆகிய நான்கு நோக்கங்களை நிறைவேற்றும் வகையில் பாதுகாப்புப் படையினருக்கு பிரத்யேக பாதுகாப்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மருத்துவமனைக்குச் செல்லும் முக்கியப் பாதைகளில் அதிகமான இஸ்லாமாபாத் காவல்துறை மற்றும் ‘ஃபிரான்டியர் கார்ப்ஸ்’ (Frontier Corps) படையினர் நிறுத்தப்பட்டனர். மேலும், இஸ்லாமாபாத் காவல் துறையின் இன்ஸ்பெக்டர் ஜெனரலும் (IG) பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் மேற்பார்வையிட மருத்துவமனைக்கே சென்றிருந்தார்.
மருத்துவமனைக்குச் செல்லும் சாலைகளில் பாதுகாப்புச் சாவடிகள் அமைக்கப்பட்டதோடு மருத்துவமனையிலும் கடுமையான பாதுகாப்புத் தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை சுமார் 1 மணியளவில் காரில் ஷிஃபா மருத்துவமனைக்கு இம்ரான் கான் அழைத்துச் செல்லப்பட்டார். இம்ரான் கான் சென்ற வாகனம் பாத்ராஸ் புகாரி சாலை வழியாகச் சென்றபோது, மக்களிடையே எவ்வளவு செல்வாக்கு அவருக்கு உள்ளது என்பதைக் காட்டும் காணொளிகள் வைரலாகி உள்ளன.
ஷிஃபா மருத்துவமனையைச் சுற்றியுள்ள இரண்டு கிலோமீட்டர் சுற்றளவில் jammers நிறுவப்பட்ட நிலையில் பின்வாசல் வழியாக உள்ளே மருத்துவமனைக்குள் இம்ரான் கான் அழைத்துச் செல்லப்பட்டார்
பொதுமக்களின் பார்வைக்குத் தெரியாமல் சிறையின் பின்பக்கம் வழியாக ரகசியமாக அழைத்து வரப்பட்ட இம்ரான் கானை யாரும் பார்த்துவிடக்கூடாது என்பதற்காக அப்பகுதியில் மின்விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன.
கானை நன்கு கவனித்துக்கொள்ளுமாறு மருத்துவமனை ஊழியர்களை வலியுறுத்தி, அவரது ஆதரவாளர்கள் ஷிஃபா மருத்துவமனையின் ‘கூகுள் மேப்ஸ்’ (Google Maps) விமர்சனப் பகுதியில் ஏராளமான செய்திகளைப் பதிவிட்டனர்.
முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஷிஃபா சர்வதேச மருத்துவமனைக்கு வந்து சேர்ந்ததை PTI கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜுல்ஃபி புகாரியும் பாகிஸ்தானின் முன்னாள் அதிபரும் PTI கட்சியின் மூத்த தலைவருமான ஆரிஃப் அல்வியும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இம்ரான் கானுக்கு மன அழுத்தம், அதிக ரத்த அழுத்தம் மற்றும் சீரற்ற இதயத் துடிப்பு போன்ற பாதிப்புகள் தீவிரமடைந்துள்ளன என்றும், தனிமைச் சிறை அவரை உடலளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும், உடனடியாகச் சுதந்திரமான மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் அந்நாட்டின் முன்னாள் அதிபர் ஆரிஃப் ஆல்வி தனது எக்ஸ்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இம்ரான் கான் ஷிஃபா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது உறுதி செய்யப்பட்டாலும், பரிசோதனைக்குப் பிறகு அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததை அடுத்து மீண்டும் அடிலாலா சிறையில் இம்ரான் கான் அடைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானை அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஷிஃபா சர்வ தேச மருத்துவமனைக்கு மாற்றி, வரும் செப்டம்பர் 16ஆம் தேதி வரை அவருக்கு உரிய சிகிச்சைகளை அளிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. குறிப்பாக இம்ரான் கானின் தனிப்பட்ட மருத்துவர் மற்றும் அவரது சகோதரி டாக்டர் அலீமா கான் ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழு ஒன்றும் அவரின் உடல்நிலையை ஆய்வு செய்ய அமைக்கப்படும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் அறிவுறுத்தியிருந்தனர்.
2023 ஆகஸ்ட் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான், தன் மீதான வழக்குகள் அனைத்தும் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என மறுத்து வருகிறார்.
















