பாரதப் பிரதமர் . மோடி மற்றும் பாஜகவிற்கு எதிராக விகடன் குழுமம் தொடர்ந்து விஷத்தைக் கக்குவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துளளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், பாரதப் பிரதமர் மோடி மற்றும் பாஜக தொண்டர்களுக்கு எதிராக வன்மத்துடனும், காழ்ப்புணர்ச்சியுடனும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ‘விகடன் குழுமத்தின்’ இந்த வார ‘ஆனந்த விகடன்’ இதழில், பாரதப் பிரதமர் உரையாற்றுவதைப் போன்றும், அவருக்கு முன்னால் இருக்கும் மக்கள் மூளை இல்லாதவர்கள் என்பது போலவும் சித்தரித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.
கருத்து சுதந்திரம்’ என்ற போர்வையில் எதை வேண்டுமானாலும் வரையலாம் என்ற ஆணவம் ஒருபோதும் ஏற்கத்தக்கதல்ல. ஏற்கனவே, கடந்த காலங்களில் பாரதப் பிரதமர் அவர்களுக்குக் கைவிலங்கு இடப்பட்டது போன்ற ஒரு அருவருப்பான கார்ட்டூனை வெளியிட்ட ‘ஹாசிப் கான்’ என்ற அதே நபர், மீண்டும் இந்த கார்ட்டூனை வரைந்திருப்பதாகத் தெரிகிறது என கூறியுள்ளார்.
இது பாரதப் பிரதமர் மோடி மற்றும் பாஜக மீதான அவரின் உள்நோக்கத்துடன் கூடிய வன்மத்தை அப்பட்டமாகக் காட்டுகிறது. அதற்கு விகடன் குழுமமும் ஆதரவளித்து உற்சாகப்படுத்துகிறது.
உண்மையில், இப்படி ஒரு கார்ட்டூனை வெளியிட்டவர்களுக்கு ‘மூளை’ இருக்கிறதா என்ற கேள்விதான் மக்கள் மத்தியில் எழுகிறது. ஆங்கிலத்தில் ‘Habitual Offender’ என்று அழைக்கும் வகையில், தொடர்ச்சியாக பாரதப் பிரதமரையும், பாஜகவையும் இழிவுபடுத்தி வரும் விகடன் குழுமம், இத்தகைய செயல்களை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அருவருப்பான கார்ட்டூனை வெளியிட்டதற்காக விகடன் நிர்வாகம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், சட்டப்படியும் ஜனநாயக முறைப்படியும் கடுமையான எதிர்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
















