உலகின் மிகப்பெரிய பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவருமான எலான் மஸ்க் உடனான நட்பை ரகசியமாக வைத்திருக்க தனக்கு 340 கோடி ரூபாய் வழங்க முன்வந்ததாகவும், அதைத் தாம் நிராகரித்து விட்டதாகவும் அவரது முன்னாள் காதலி ஆஷ்லி செயிண்ட் கிளேர் கூறியிருப்பது சர்வதேச அளவில் விவாதத்தை கிளப்பியுள்ளது. இருவருக்கும் இடையே என்ன நடந்தது? பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்…
அமெரிக்க அரசியல் விமர்சகரும், சமூக வலைதள பிரபலமுமான ஆஷ்லி செயிண்ட் கிளேர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தொழிலதிபர் எலான் மஸ்க் உடனான தனது நட்பு மற்றும் அதனைச் சுற்றிய சர்ச்சை குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார்…
தனக்கும் எலான் மஸ்க்கும் பிறந்த குழந்தை குறித்து வெளியே பேசக்கூடாது என்பதற்காக மிகப் பெரிய தொகை, அதாவது இந்திய மதிப்பில் சுமார் 340 கோடி ரூபாய் வரை வழங்க எலான் மஸ்க் முன்வந்ததாக அவர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வகையில், முதலில் வீடு வாங்கவும் எதிர்கால செலவுகளுக்காகவும் 15 மில்லியன் டாலர் வழங்கப்படும் என்று எலான் மஸ்க் தரப்பில் கூறப்பட்டதாகவும், பின்னர் மாதந்தோறும் ஒரு லட்சம் டாலர் வீதம் 20 ஆண்டுகளுக்கு வழங்கப்படும் என்றும் கூறப்பட்டதாகவும் ஆஷ்லி தெரிவித்துள்ளார்…
ஆனால், அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்து விட்டதாக கூறியுள்ள ஆஷ்லி, எலான் மஸ்க் பற்றியோ, அவரது நிறுவனங்கள் பற்றியோ எதையும் பேசக்கூடாது என்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்…
இதற்கு தன்னுடைய மனசாட்சி ஒப்புக் கொள்ளவில்லை என்றும், பணத்திற்காக அமைதியாக இருக்க முடியாது என்றும் கூறிய அவர், தேவைப்பட்டால் தன் குழந்தைகளுடன் ஒரு சிறிய அறையில் கூட வாழத் தயார் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆஷ்லியின் இந்தப் பேட்டி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், சர்வதேச அளவில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
கடந்த ஆண்டு எலான் மஸ்க்கின் குழந்தைக்கு தாயாக இருப்பதாக ஆஷ்லி செயிண்ட் கிளேர் பொதுவெளியில் அறிவித்திருந்தார். அதன் பின்னர் இருவருக்கும் இடையே சட்டரீதியான பிரச்னை உருவானதாக கூறப்படுகிறது…
குழந்தை பராமரிப்பு தொகை, குழந்தையின் பாதுகாப்பு உரிமை மற்றும் பல்வேறு தனிப்பட்ட விவகாரங்கள் தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன…
இந்த விவகாரத்தில் எலான் மஸ்க் தரப்பில் அதிகாரப்பூர்வ பதில் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், ஆஷ்லியின் குற்றச்சாட்டுகள் அமெரிக்க ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன…
உலகின் மிகப்பெரிய செல்வந்தர்களில் ஒருவரான எலான் மஸ்க்கின் தனிப்பட்ட வாழ்க்கை மீண்டும் ஒரு முறை சர்வதேச அளவில் டிரெண்டாகியுள்ளது. இந்த விவகாரத்திற்கு எலான் மஸ்க் தரப்பில் பதில் வருமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…
















