ஆடி மாதத்தை முன்னிட்டு ஆன்மிக சுற்றுலாவை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மீண்டும் அறிவித்துள்ளது.
சென்னை, மதுரை, திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் உள்ள பிரசித்திபெற்ற அம்மன் கோயில்களுக்கு ஆடி மாதத்தில் தரிசனம் மேற்கொள்ள ஒரு நாள் ஆடி அம்மன் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன்படி வரும் 17ஆம் தேதி முதல் ஆடி மாதத்தின் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் ஆடி அம்மன் சுற்றுலா மேற்கொள்ள பொதுமக்கள் முன்பதிவு செய்து பயன்பெற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஆடி அம்மன் சுற்றுலா திட்டத்தின்படி சென்னையில் உள்ள கோயில்களில் தரிசனம் செய்ய ஆயிரம் ரூபாயும், மதுரையில் உள்ள அம்மன் கோயில்களில் தரிசனம் செய்ய ஆயிரத்து 400 ரூபாயும் கட்டணமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆடி அம்மன் சுற்றுலா பயணத் திட்டங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் குடிநீர் வசதி, மதிய உணவு, கோயில்களின் பிரசாதம் மற்றும் சிறப்பு தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் தெரிவித்துள்ளது.
















