செயற்கை நிறமிகள் கலந்த கலர் அப்பளங்களை விற்பனை செய்ய தமிழக உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கண்ணைக் கவரும் கலர் அப்பளங்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்க வேண்டாம் என பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செயற்கை நிறமிகள் கலந்த கலர் அப்பளங்களை அடிக்கடி உட்கொள்வதால், செரிமானக் கோளாறு, சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட உடல்நலப் பிரச்னைகள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குழந்தைகளுக்கு அலர்ஜி மற்றும் கவனச் சிதறல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, உளுந்து, அரிசி உள்ளிட்ட பாரம்பரிய மூலப்பொருட்களால் தயாரிக்கப்படும் அப்பளங்களையே வாங்கி பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செயற்கை நிறமிகள் பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பளங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
சந்தைகள், சுற்றுலாத் தலங்கள், பொருட்காட்சிகள் உள்ளிட்ட இடங்களில் கலர் அப்பளங்களை விற்பனை செய்யக்கூடாது என்றும் உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
















