நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் எதிரொலியாக, இமயமலைப் பகுதியில் உள்ள மாநிலங்களில் பனிச்சரிவு அபாயம் குறித்து மத்திய அரசு ஆய்வு மேற்கொண்டது.
மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் தலைமைச் செயலர்கள், பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
மத்திய உள்துறை அமைச்சகம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மத்திய நீர்வள ஆணையம், இந்திய வானிலை ஆய்வு மையம் உள்ளிட்ட அமைப்புகளின் அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது, பனிப்பாறை ஏரிகளை தொடர்ந்து கண்காணிப்பது, முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்புகளை வலுப்படுத்துவது, வெள்ளநீர் செல்லும் பாதைகளை கண்டறிவது, மக்கள் வெளியேற்றம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தயார் நிலையில் வைத்திருப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மேலும், மாநில அரசுகள், மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் அறிவியல் நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், 2024ஆம் ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்ட, பனிப்பாறை ஏரி உடைப்பு, வெள்ளத் தடுப்பு திட்டங்களை விரைவுபடுத்தவும் மத்திய அரசு அறிவுறுத்தியது.
















