திருப்பூரில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பிரதிஷ்டை செய்யப்பட்ட 1,100 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, சமளாபுரம் பகுதியில் உள்ள நீர் நிலையில் கரைக்கப்பட்டன.
புதிய பேருந்து நிலையம், தாராபுரம் சாலை, செல்லம் நகர் என 3 இடங்களில் இருந்து புறப்பட்ட ஊர்வலம், முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலங்காடு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில், வில் ஏந்திய விநாயகர், சிம்ம வாகன விநாயகர், யானை விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவிலான சிலைகள் இடம்பெற்றன.
அனைத்து சிலைகளும் மங்களம் சாலை வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, சாமளாபுரம் பகுதியில் உள்ள நீர்நிலையில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை ஊர்வலத்தை ஒட்டி 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதுடன், பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டிருந்தன.
















