டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததோடு அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அணை நிரம்பும் வரை காத்திருக்காமல் வெள்ள ஆபத்தை தடுக்கும் வகையிலும், காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடிக்கான முன்னேற்பாடுகளை தொடங்கும் வகையிலும், உடனடியாக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க அரசு முன்வர வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவுள்ளதால் காவிரி பாசன மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அனைத்து விதமான உதவிகளையும் தமிழக அரசு வழங்க வேண்டுமெனவும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், சம்பா சாகுபடிக்கு தேவையான உரம், விதை நெல் உள்ளிட்ட இடுபொருட்கள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் போதிய அளவில் இருப்பு இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், வேளாண் துறை அலுவலகங்கள் வாயிலாக விதை நெல், உரங்கள் மற்றும் பயிர்க்கடன் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.