வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டதற்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பொதுக் கூட்டத்தில் பேசியதற்காக வடசென்னை மேற்கு மாவட்ட பாஜக தலைவர் கபிலன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், திமுக அரசின் இந்த பாசிசப் போக்கை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து, தினம் தினம் கொலைகளும், கொள்ளைகளும் நடந்து வரும் சூழலில் தனது அரசியலுக்காக காவல்துறையை திமுக பயன்படுத்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
பொதுமக்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு வழங்க இயலாத முதலமைச்சர் ஸ்டாலின், பாஜகவை முடக்குவதில் மும்முரமாக இருப்பதாக விமர்சித்துள்ள அவர், இதுபோன்ற அடக்குமுறைகளால், திமுகவின் நிர்வாகத் தோல்வியை மறைக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்
அடக்குமுறைகளை கைவிட்டு, மாநில அரசின் அடிப்படைக் கடமையான சட்டம் ஒழுங்கைக் முதலமைச்சர் ஸ்டாலின் கவனிக்க வேண்டுமெனவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.