இந்திய திரையுலகின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது, நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மிருகயா என்ற திரைப்படத்தின் மூலம் இந்தி திரையுலகில் கடந்த 1976-ஆம் ஆண்டில் அறிமுகமானவர் நடிகர் மிதுன் சக்ரவர்த்தி. திரையுலகில் ஏறத்தாழ 50 ஆண்டு காலம் அவர் ஆற்றிய பங்களிப்பை கெளரவிக்கும் விதமாக அவருக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்படுவதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். வரும் 8-ஆம் தேதி நடைபெறும் தேசிய திரைப்பட விழாவில் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்படுகிறது.
தனக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது தொடர்பாக மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நடிகர் மிதுன் சக்ரவர்த்தி, இதைக் கனவிலும் எதிர்பார்க்கவில்லை என உணர்ச்சிவசப்பட்டு கூறினார். மேலும், மேற்கு வங்கத்தில் ஃபிளாட்பாரமில் இருந்து வந்த தாம், இன்றைக்கு தாதாசாகேப் விருதைப் பெறுவதை கெளரவமாக கருதுவதாக கூறிய அவர், விருதை தனது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் அர்ப்பணிப்பதாக அவர் தெரிவித்தார்.
இதனிடையே, தாதாசாகேப் பால்கே விருது பெறும் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், இந்திய திரையுலகுக்கு மிதுன் சக்ரவர்த்தி ஆற்றிய ஈடுஇணையற்ற பங்களிப்பு காரணமாக தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.
இதேபோல நடிகர் மிதுன் சக்ரவர்த்தியை பாராட்டி மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், அவர் மேலும் பல சாதனைகள் படைக்க தாம் வாழ்த்துவதாக கூறியுள்ளார்.