தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி அமித்ஷாவின் வியூகம், திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகப் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
இந்தியாவிலேயே பாஜகவுக்கு எதிராகப் போராடி கொண்டிருக்கிற ஒரே கட்சி திமுகதான் எனவும், பாஜகவால் வெல்ல முடியாத ஒரே இடம் தமிழகம்தான் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியதாகச் சுட்டிக்காட்டினார்.
மேலும் அமித்ஷா தனது படையையே அழைத்து வந்தாலும் தமிழகத்தில் பாஜகவால் வெல்ல முடியாதென ஸ்டாலின் பேசியதாக அவர் தெரிவித்தார்.
திமுகவை வீழ்த்தும் சக்தியாகப் பாஜக மாறிவிட்டதால்தான் அக்கட்சியை பற்றியும், அமித்ஷா பற்றியும் முதலமைச்சர் ஸ்டாலின் பேசி வருவதாகவும் தமிழக பேரவை தேர்தலுக்கான அமித்ஷாவின் வியூகம் அவருக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை கூட மதிக்காத திமுகவுக்கு வரும் பேரவைத் தேர்தலில் மக்கள் நிச்சயம் பாடம் புகட்டுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
















