வருமான வரி தொடர்பான தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் த.வெ.க தலைவர் விஜய் மேல்முறையீடு செய்துள்ளார்.
கடந்த 2015-16ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறையினர், விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்ததனர்.
இதனால் வருமானத்தை மறைத்ததற்காக, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிர்த்து விஜய் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அபராதம் விதித்த உத்தரவில் எந்த சட்டவிரோதமும் இல்லை என்றும், நீதிமன்றம் தலையிட எந்த காரணமும் இல்லை என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படகிறது.
















