தேர்தல் தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சிப்பதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக கூட்டணியில் தமிழகத்தை சேர்ந்த 39 எம்பிக்கள் இருக்கும் போது, நாடாளுமன்றத்தில் பேசுவதை விட்டுவிட்டு, பொது இடத்தில் மசோதா நகலை எரிப்பது என்ற அநாகரீகமான செயலை மாநிலத்தின் பொறுப்பு முதல்வராக இருக்கும் ஸ்டாலின் செய்வது சட்டவிரோதச் செயல் என, அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற நடைமுறையை அவமதிப்பது சட்ட விரோதம் என்றும், அரசியல் சட்டத்தை அவமதிப்பவர்கள் மீது மத்திய அரசு உறுதியான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
திமுகவின் வன்முறையை தேர்தல் ஆணையம் தடுத்து நிறுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் கேட்டுக்கொண்டுள்ளார்.
















