அமெரிக்கக் கடற்படையின் ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையின் காரணமாக, ஒரு நாளைக்கு 40 கோடி டாலர்களை ஈரான் இழந்து வருகிறது. நாட்டின் எண்ணெய் சேமிப்புத் திறன் இரண்டு வாரங்களுக்கு மட்டுமே போதுமானதாக உள்ள நிலையில், இன்னும் சில நாட்களிலேயே இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்கு இஸ்லாமிய புரட்சிகர காவல் படை ஒப்புக்கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய போர் இன்னும் முழுமையாக முடியவில்லை.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த 40 நாட்களில் ஈரானின் பொருளாதாரத்துக்குப் போரினால் ஏற்பட்ட சேதம் சுமார் 270 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த ஜனநாயகப் பாதுகாப்புக்கான அறக்கட்டளை என்ற Foundation for Defense of Democracies என்ற சிந்தனைக் குழுவின் ஆரம்பகட்ட மதிப்பீடுகளும், ஈரான் சுமார் 150 முதல் 300 பில்லியன் டாலர்கள் வரையிலான பொருளாதார சேதத்தைச் சந்தித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றன.
சுமார் 92 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரானில் 150 பில்லியன் டாலர் இழப்பு என்ற குறைந்தபட்ச மதிப்பீடு செய்தால் கூட ஒரு நபருக்கு சுமார் 1,600 டாலர்களுக்குச் சமமாகும். அதிகபட்ச மதிப்பீட்டின்படி இது ஒரு நபருக்கு கிட்டத்தட்ட 3,250 டாலர்களாக உயர்கிறது.
உள்கட்டமைப்பு சேதம் போரின் முதல் வாரத்திலேயே சுமார் 1.4 பில்லியன் டாலரை எட்டியதாகவும் அடுத்த 15 ஆண்டுகளில் ஈரானின் புனரமைப்புச் செலவுகள் 600 பில்லியன் டாலரைத் தொடும் என்றும் சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் கணித்துள்ளன.
போரினால் சேதமடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகலாம் என்று அதிபர் மசூத் பெஷெஷ்கியனிடம் அந்நாட்டு மத்திய வங்கி எச்சரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க இஸ்ரேல் கூட்டுப்படைகளின் தாக்குதலால் ஈரானின் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையே சேதத்தின் மிகப்பெரிய சேதத்தைச் சந்தித்துள்ளது. ஆண்டுக்கு 29.1 பில்லியன் டாலர் விற்பனை கொண்ட ஈரானின் பெட்ரோ கெமிக்கல் துறையின் ஏற்றுமதி திறன், மஹ்ஷஹர் மற்றும் தெற்கு பார்ஸ் உள்ளிட்ட முக்கிய மையங்கள் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து சுமார் 85 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்பட்ட இழப்புகள் சுமார் 50 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப் பட்டுள்ளன.
2024-ஆம் ஆண்டில் சுமார் 78 பில்லியன் டாலர் ஏற்றுமதி வருவாயை ஈட்டிய ஈரானின் எரிசக்தித்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள. இதனால் ஏற்படும் இழப்புகள் 25 பில்லியன் டாலர்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளன.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்துக்கும் அதிகமான சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், இது 44 பில்லியன் டாலர் வரையிலான பொருளாதாரச் செயல்பாட்டு இழப்புக்குச் சமம் என்றும் பொருளாதார வல்லுநர்கள் மதிப்பிட்டுள்ளனர். பணவீக்கம் 180 சதவீதத்தை நோக்கி உயரும் மற்றும் வேலையின்மை கடுமையாக அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
போருக்கு முன்பே ஒரு டாலருக்கு 8,50,000 ஈரான் ரியால் என்ற மதிப்பில் ஈரானின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியில் இருந்தது குறிப்பிடத் தக்கது.
இந்தப் போர்ச் சூழலிலும் எண்ணெய் விநியோகத்தைத் தொடர, ஈரான் தனது மறைமுகக் கப்பல் படையையே நம்பியுள்ளது. ஏற்கெனவே இரண்டாவது பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும் நிலையில் பிரென்ட் விலையை விட ஒரு பேரலுக்கு 20 டாலர் வரை தள்ளுபடியில் கச்சா எண்ணெயை விற்கும் நிலையில் ஈரான் உள்ளது.
கூடுதலாக மறைமுக கப்பல் படையைப் பராமரித்து எண்ணெய் விநியோகத்தைத் தடையின்றி செய்ய ஒரு நாளைக்கு சுமார் 12 மில்லியன் டாலர்களை ஈரான் செலவழிக்க வேண்டியுள்ளது.
இதற்கிடையே தனக்கு சாதகமாக இருக்கும் என்று ஈரான் பயன்படுத்திய ஹார்முஸ் ஜலசந்தி துருப்பு சீட்டு ஈரானுக்கே பாதகமாக மாறியுள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு விநியோகம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடக்கிறது. எனவே இந்த குறுகிய ஜலசந்தியை ஈரான் ஒரு பேரம் பேசும் கருவியாக வைத்திருந்தது.
இந்தக் கடல்பாதை வழியாக நடைபெறும் அனைத்துப் போக்குவரத்துகளையும் தடுத்து நிறுத்திவிட்டு, யாரிடமெல்லாம் கோடிக்கணக்கான டாலர்களைக் கட்டணமாக மிரட்டிப் பறிக்க முடியுமோ அவர்களை மட்டும் அனுமதிக்கும் திட்டத்தையும் ஈரான் கொண்டிருந்தது.
ஆனால் பாகிஸ்தானில் நடந்த 21 மணிநேர பேச்சுவார்த்தையில் சுமூகமான ஒப்பந்தம் எட்டப்படாததால், ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரானின் துறைமுகங்களை அமெரிக்க கடற்படை முற்றுகை இடும் என்றும் ஈரான் துறைமுகங்களுக்குள் கப்பல்கள் நுழைவதையும் வெளியேறுவதையும் ஈரானுக்குக் கட்டணம் செலுத்தும் அனைத்து நாட்டுக் கப்பல்களையும் அமெரிக்கா தடுக்கும் என்று அறிவித்தார்.
இப்போது ஈரானின் துறைமுகங்கள் அனைத்தும் முற்றிலுமாக முடக்கப்பட்டிருப்பதால், அந்நாடு நாளொன்றுக்கு சுமார் 435 மில்லியன் டாலர் இழப்பைச் சந்தித்து வருகிறது. இந்த பணத்தில் நான்கு ரஃபேல் போர் விமானங்களை வாங்க முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.
12 அமெரிக்க போர்க்கப்பல்களும்,10,000 அமெரிக்க கடற்படை மற்றும் மரைன் வீரர்களும் வளைகுடாவுக்கு வெளியே, ஓமன் வளைகுடாவில் முற்றுகையிட்டுள்ள நிலையில் ஈரானின் எண்ணெய் விற்பனை முற்றிலுமாக தடுக்கப் பட்டுள்ளது.
அமெரிக்காவிடம் சரணடைவதைத் தவிர ஈரானுக்கு வேறு வழியே இல்லை என்று சர்வதேச அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
















