கரூரில் செந்தில் பாலாஜியின் நண்பருக்கு சொந்தமான இடங்கள் உட்பட ஏழு இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் 4-வது கிராஸ் பகுதியில் உள்ள அரசு ஒப்பந்ததாரரும், செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பராகக் கூறப்படும் எம்.சி.எஸ். சங்கர் ஆனந்த் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
முதற்கட்டமாக அலுவலகம் மற்றும் வீடு என இரண்டு இடங்களில் கணக்குப் பதிவுகள் மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து கோவை சாலையில் செயல்பட்டு வரும் ‘கொங்கு மெஸ்’ மற்றும் ‘சக்தி மெஸ்’ ஆகிய உணவகங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல்வேறு முக்கிய ஆவணங்கள் மற்றும் பரிவர்த்தனை விவரங்கள் குறித்து ஆய்வு நடைபெற்றது.
ஏற்கனவே கரூர் மாவட்டத்தில் ‘சிவா டெக்ஸ்டைல்’ உள்ளிட்ட திமுக வேட்பாளர் பங்குதாரராக உள்ள நிறுவனங்களில் சோதனை நடைபெற்ற நிலையில், மேலும் 7 இடங்களில் சோதனை நடந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய துணை ராணுவ படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்றது.
















