கர்நாடக மாநிலம் கபினி அணை நிரம்பும் நிலையை எட்டியுள்ளதால், அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வினாடிக்கு 12 ஆயிரம் கன அடிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அண்டை மாநிலமான கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டத்தில் அமைந்துள்ள கபினி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரித்து, அணை நிரம்பும் நிலையை எட்டியுள்ளது. இதனால் அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ளது. இந்த நீர், கபினி ஆறு வழியாக தமிழ்நாட்டிற்குச் செல்லும். வயநாடு படுகையில் மழை தொடர்வதால், கபினி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கபினி அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவை படிப்படியாக மேலும் அதிகரிக்க அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். இதன் காரணமாக கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
















