போட்டி நாடுகளைவிட இந்திய ஏற்றுமதிகளுக்கு தெளிவான வரிச் சலுகை மற்றும் போட்டி சலுகை உறுதி செய்யப்படும் போது மட்டுமே இந்திய- அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் பகுதி நடைமுறைக்கு வரும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகள் மீது 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க அதிபர் ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் சட்ட மசோதாவுக்கு அந்நாட்டு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இந்தியா-அமெரிக்க இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தின் முதல் கட்ட பேச்சுவார்த்தைகள் ஏற்கெனவே நிறைவடைந்து விட்டதாகவும் அமல்படுத்தக் காத்திருப்பதாகவும் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
அண்டை மற்றும் ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் போட்டித்திறனை உறுதி செய்வதே இந்த ஒப்பந்தத்தின் மையப்பகுதி என்றும் கோயல் குறிப்பிட்டுள்ளார்.
சீனா, வியட்நாம், தாய்லாந்து மற்றும் பங்களாதேஷ் போன்ற போட்டி நாடுகளைக் காட்டிலும் இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க சந்தையில் கூடுதல் வரி விலக்கு அல்லது முன்னுரிமை கிடைக்கும் வரை இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வராது என்பதையே கோயல் சுட்டிக் காட்டியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் அமெரிக்காவின் பிரிவு 301 செயல்முறை உட்பட, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக உறவு குறித்த விவாதங்கள் நடந்து கொண்டிருக்கும் வேளையில் கோயலின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஒப்பீட்டு சாதகம் இருக்கும் வரை அல்லது அவர்கள் ஒப்பீடான வரிகளை எதிர்கொள்ளும் வரை இந்தியா, அமெரிக்க சந்தையைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளும் என்றும் அவர் கோயல் கூறியுள்ளார்.
சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியா-ஓமன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கடந்த ஜூலை 15 ம் தேதி அமலுக்கு வந்தது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அதன் சட்டரீதியான ஆய்வை நிறைவு செய்யும் தருவாயில் உள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிறகு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
சுமார் 20 டிரில்லியன் டாலர் ஒருங்கிணைந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்ட 27 ஐரோப்பிய நாடுகளில், இந்தியப் பொருட்கள், சேவைகள் மற்றும் போக்குவரத்து ஏற்றுமதிக்கு இந்த வர்த்தக ஒப்பந்தம் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்பதால், இது “விளையாட்டின் போக்கையே மாற்றக்கூடியது” என்று கோயல் விவரித்துள்ளார்.
இதற்கிடையே ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்கா கொண்டுவந்துள்ள சட்ட மசோதாவில், ரஷ்ய அதிகாரிகள், பெரும் செல்வந்தர்கள் (oligarchs) மற்றும் நிதி நிறுவனங்கள் மீது கூடுதல் தடைகளை விதிக்கவும், ஏற்கனவே உள்ள தடைகளைத் தவிர்த்து ரஷ்ய எண்ணெயைக் கொண்டு செல்லப் பயன்படுத்தப்படும் “நிழல் கப்பற்படை” (shadow fleet) மீது நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்க பட்டுள்ளது.
உக்ரைன் போருக்கான நிதியைத் திரட்டும் ரஷ்யாவின் எரிசக்தி வருவாயைக் குறைப்பதற்காகவே இந்த சட்ட மசோதா அவசியம் என்று அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.
உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து, சீனாவுக்கு அடுத்தபடியாக ரஷ்ய கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் உலகின் இரண்டாவது பெரிய நாடாக இந்தியா மாறியது. இந்நிலையில், அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட இந்த மசோதா சட்டமாக நிறைவேறினால் இந்தியாவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் உலகளாவிய இருப்பை விரிவுபடுத்தவும், 2047-ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த மற்றும் செழிப்பான பொருளாதாரமாக மாறுவதற்கான தனது நீண்டகால இலக்கை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வரும் நிலையில், மற்ற நாடுகளுடன் இந்தியா ஏற்படுத்தியுள்ள வர்த்தக ஒப்பந்தங்கள் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புகளை வழங்கும் என்று மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
















