மதுரை மீனாட்சி – சுந்தரேஸ்வரர் கோயிலில் நடந்த சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 30ஆம் தேதி வரை 13 நாட்கள் கொண்டாடப்படவுள்ள நிலையில், காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சித்திரை திருவிழா கொடியேற்ற நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது.
கோயில் கம்பத்தடி மண்டபத்தின் அருகே உள்ள கொடி மரம் தர்ப்பை புற்களால் அலங்கரிக்கப்பட்டு, வெண்பட்டுகள் சுற்றப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
கொடி மரத்தின் முன்பு மீனாட்சியம்மனும், பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
இதனை தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க தங்கக் கொடி மரத்தில் சித்திரை திருவிழா உற்சவக் கொடி ஏற்றப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















