நெல்லை ராதாபுரம் பகுதியில் கல்குவாரி மூலம் 5 ஆயிரம் கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், திமுக ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்கள் சிறை செல்வர் என உறுதிபடக் கூறினார்.
நெல்லை ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியின் பணகுடி பகுதியில் பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக வேட்பாளர் சி. பாலகிருஷ்ணனை ஆதரித்து ரோடு ஷோ நடத்தினார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய ராஜ்நாத் சிங், என்டிஏ ஆட்சி அமைந்ததும் தமிழகத்தில் ஒரு லட்சம் அரசு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இலவசப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
திமுக அரசின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்த ராஜ்நாத் சிங், தமிழகத்தின் நிதி நிலைமையை திமுக சீர்குலைத்துவிட்டதாகவும், ஊழல் மலிந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டினார். தமிழகத்தின் கடலோர மாவட்டங்களின் வளர்ச்சிக்காகத் துறைமுகங்கள் நவீனப்படுத்தப்படும் என்று உறுதியளித்த அவர், தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த தாமரைச் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
















