விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு, திமுக-வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டுமென மத்திய அமைச்சர் எல்.முருகன் கேட்டுக்கொண்டார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனி தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன், அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் முதல் அவிநாசி பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக நடந்து சென்றார்.
கடைகள் மற்றும் வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். எல்.முருகனுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது பேசிய பா.ஜ.க வேட்பாளர் எல்.முருகன், விலைவாசி உயர்வு, வரிகள் உயர்வு, பால் விலை உயர்வு உள்ளிட்டவற்றை மனதில் கொண்டு, திமுக-வை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பிரதமர் மோடியின் மக்கள் நலத்திட்டங்களை எடுத்துரைத்து தாமரை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார். தொடர்ந்து, செல்லும் வழியில் இருந்த கோயில்களில் எல்.முருகன் சாமி தரிசனம் செய்து, பக்தர்கள் மற்றும் பூசாரிகளிடம் வாக்கு சேகரித்தார்.
















