இந்தியாவில் வரும் டிசம்பர் மாதத்திற்குள் 85 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்தவும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும், இதன் ஒரு பகுதியாக, 85 சதவீத எத்தனால் மற்றும் 15 சதவீத பெட்ரோல் கொண்ட E85 எரிபொருள் நடப்பாண்டு இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
E85 எரிபொருளைப் பயன்படுத்துவது கட்டாயமல்ல என்றும், மக்கள் தங்களுக்கு விருப்பமான எரிபொருள் வகையைத் தேர்ந்தெடுத்து கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. எரிபொருளைப் பயன்படுத்தக்கூடிய பிரத்யேக வாகனங்களைத் தயாரிக்க வாகன உற்பத்தியாளர்கள் தயாராக உள்ளனர் என்றும், எத்தனால் உற்பத்தியால் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், நாடு முழுவதும் 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோல் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும், அடுத்தகட்டமாக E22, E25 மற்றும் E26 ஆகிய ரகங்களுக்கான தரநிலைகளும் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
















