மும்பை அருகே கலிமாவை ஓதக் கூறி 2 பாதுகாவலர்களை கத்தியால் தாக்கிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே உள்ள மீரா சாலையில் கட்டுமான கட்டடத்தில் ராஜ்குமார் மிஸ்ரா, சுப்ரோடோ சென் ஆகியோர் பாதுகாவலர்களாக பணியாற்றி வருகின்றனர். இருவரும் இரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த அன்சாரி என்ற இளைஞர், இருவரிடமும் கலிமாவை ஓத முடியுமா என கேட்டுள்ளார்.
அதற்கு தெரியாது என பதிலளித்த இருவரையும், கத்தியால் தாக்கிவிட்டு இளைஞர் தப்பியோடியுள்ளார். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், மீரா ரோடு கிழக்கு பகுதியில் தங்கியிருந்த அன்சாரியை கைது செய்தனர். மேலும், கைது செய்யப்பட்டுள்ள அன்சாரி ஐஎஸ்ஐஎஸ்-ன் பிரச்சார வீடியோக்களை பார்த்துள்ளதால், இந்த தாக்குதலுக்கு தீவிரவாத தொடர்புகள் உள்ளதா என்ற கோணத்தில் காவல்துறையினரும், பயங்கரவாத தடுப்பு பிரிவினரும் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















