தமிழகத்தைப் போன்றே கேரளம், அசாம், புதுச்சேரியிலும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
கேரள சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 140 தொகுதிகளுக்கு ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி என மும்முனை போட்டி நிலவியது. அங்கு அமைதியாக நடந்த தேர்தலில் 79.7 சதவிகித வாக்குகள் பதிவாகின.
மெஜாரிட்டிக்கு 71 இடங்கள் தேவை என்ற நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. தேர்தல் முடிவுகள் 5 மணிக்குள் தெரிந்துவிடும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
இதேபோன்று புதுச்சேரியில் காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியங்களில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதில் 91.23 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதற்காக மொத்தம் 6 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணும் மையத்திலிருந்து 100 மீட்டர் வரை வாகன போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒவ்வொரு சுற்றிற்கு பிறகு பொது மக்களின் தகவலுக்காக இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
126 தொகுதிகளை கொண்ட அசாம் மாநில சட்டப்பேரவைக்கு கடந்த 9-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, AIUDF மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்டவை தேர்தலை எதிர்கொண்டன.
இதில் 85 சதவிகித வாக்குகள் பதிவான நிலையில், இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. கடந்த 2016 மற்றும் 2021 பேரவை தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருந்த நிலையில் என்டிஏ கூட்டணி மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















