வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார உயர்வுக்கு பிரிக்ஸ் மிக முக்கியமான தளமாக இருக்கும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.
இந்தியா தலைமையில் நடைபெறும் பிரிக்ஸ் கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சர்களின் 2 நாள் மாநாடு டெல்லியில் தொடங்கியது. இதில் பிரிக்ஸ் அமைப்பில் உள்ள பல்வேறு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பல்வேறு நாடுகளில் நீடிக்கும் மோதல்கள் உலகை பாதித்து வருவதாக தெரிவித்தார். இதுபோன்ற சூழலில் பிரிக்ஸ் அமைப்பு ஒரு நிலைத்தன்மை அளிக்கும் சக்தியாக செயல்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், உணவு பாதுகாப்பு, எரிசக்தி விநியோகம், உரத் தட்டுப்பாடு, சுகாதார பாதுகாப்பு மற்றும் நிதி அணுகல் போன்ற பிரச்சினைகளில் பல நாடுகள் சிரமப்படுவதாகவும், அதற்கு பிரிக்ஸ் நாடுகள் இணைந்து தீர்வு காண முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். உலகளாவிய பொருளாதார நிலைத்தன்மைக்காக நம்பகமான சப்ளை செயின் மற்றும் பல்துறை சந்தைகள் அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
















