நீலகிரி மாவட்டம் கூடலூர் சோதனைச்சாவடியில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.
உதகையில் கோடை சீசன் தொடங்கியுள்ள நிலையில், அங்குள்ள அரசு தாவரவியல் பூங்காவில் உலகப் புகழ்பெற்ற 128-வது மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
இதனை காண கூடலூர் வழியாக உதகைக்கு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர். இந்நிலையில் கல்லட்டி மலைப்பாதை வழியாக சுற்றுலாப் பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதனால் உதகைக்கு கூடலூர் சோதனைச்சாவடி வழியாகவே சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர். அந்த வகையில் கூடலூர் சோதனைச்சாவடியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இ-பாஸ் சோதனைக்கு பின்பே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் கடும் சிரமத்தை சந்தித்த வாகன ஓட்டிகள், போக்குவரத்தை சீரமைத்து வாகனங்களை வேகமாக அனுமதிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
















