கடைகளில் ஏற்படும் செலவினங்கள் அனைத்தையும் நிர்வாகம் ஏற்றுக்கொண்டு, உழைப்புக்கு ஏற்ற ஊதியத்தை வழங்கினால் பாட்டிலுக்கு மேல் ஒரு ரூபாய் கூட கூடுதலாக விற்க மாட்டோம் என டாஸ்மாக் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம், பணி பாதுகாப்பு வழங்க கோரி டாஸ்மாக் சங்க கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஊர்வலமாக சென்று கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பு நிர்வாகிகள், டாஸ்மார்க் மேற்பார்வையாளர்களுக்கு கடந்த 23 வருடங்களாக 16 ஆயிரத்து 850 ரூபாய் மற்றும் விற்பனையாளருக்கு 14 ஆயிரத்து 530 ரூபாய் அளவே ஊதியம் வழங்கப்படுவதாக கூறினர்.
கடைக்கு ஏற்றார்போல் ஆயிரம் முதல் 3 ஆயிரம் ரூபாய் வாடகை வழங்கும் டாஸ்மாக் நிர்வாகம், மின்கட்டணத்தை வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
கடைகளில் விற்பனை செய்யும்போது தவறுதலாக உடையும் பாட்டில்களுக்கு சராசரியாக ஆயிரம் ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது என்றும், ஒரு கடையை நிர்வாகிப்பதற்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை கூடுதல் செலவாகிறது எனவும் குறிப்பிட்டனர்.
















