சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமி, நேற்று முன்தினம் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது மாயமானார். இதையடுத்து பல்வேறு பகுதிகளில் தேடியும் சிறுமி கிடைக்காத நிலையில், சூலூர் காவல்நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர்.
இந்நிலையில், கிராமத்தில் உள்ள குளக்கரை பகுதியில் சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். உடலில் காயங்கள் இருந்த நிலையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
தகவலறிந்து சென்ற போலீசார் உடலை மீட்டு கோவை அரசு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்தி மற்றும் அவருக்கு உதவியதாக மோகன்ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதனிடையே குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வலியுறுத்தி சூலூர் காவல்நிலையம் முன்பு சிறுமியின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து பேட்டியளித்த சிறுமியின் உறவினர்கள், குற்றவாளிகளை தங்களிடம் காட்ட வேண்டும் எனவும் கடுமையான தண்டனை வழங்கும் வரை உடலை வாங்கமாட்டோம் எனவும் தெரிவித்தனர்.
















