முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதி கோரி தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது பணமோசடி வழக்கு ஒன்றில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி உள்ளது. இதுதொடர்பாக, முந்தைய திமுக ஆட்சியின்போது அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது.
இருப்பினும், அவரை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு திமுக அரசு அனுமதி வழங்கவில்லை. இந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதிகோரி, தற்போதைய தவெக தலைமையிலான தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமலாக்கத்துறை அனுப்பிய அந்த நான்கு பக்க கடிதத்தில், கடிதம் பெறப்பட்ட 120 நாட்களுக்குள் மாநில அரசு அனுமதி வழங்காவிட்டால், ஒப்புதல் வழங்கப்பட்டதாகவே கருதப்படும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை விசாரிக்கவும் அனுமதிகோரி தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
















